திட்டமிட்டபடி ஜூரோங் துறைமுக விரிவாக்கம் நடக்கும்

திட்டமிட்டபடி ஜூரோங் துறைமுக விரிவாக்கம் நடக்கும்

2 mins read

எதிர்வரும் 2025ஆம் ஆண்டில் 26 மில்லியன் கொள்கலன் அளவுக்கு சரக்குகளை கையாளக்கூடிய திறன் இருக்கும் அளவுக்கு ஜூரோங் துறைமுக விரிவாக்கம் திட்டமிட்டபடி நடைபெற்று வருவதாக அதன் நடத்துனர் நேற்று தெரிவித்துள்ளார்.

இதற்காக அங்கு $200 மில்லியன் பெறுமானமுள்ள கான்கிரீட் இடவசதியை உருவாக்கும் கட்டுமானப் பணிகள் இதற்கு முன் கொரோனா கிருமித்தொற்றால் ஏற்பட்ட முடக்கநிலை காரணமாக தடைப்பட்டது.

எனினும், 18.5 ஹெக்டர் இடவசதியைத் துறைமுகத்துக்கு சேமித்துத் தருவதுடன் ஆண்டொன்றுக்கு கிட்டத்தட்ட 600,000 கனரக வாகனப் பயணங்களைக் குறைக்கக்கூடிய இந்த விரிவாக்கத் திட்டம், 2023ஆம் ஆண்டில் முடிவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

"எங்களுடைய இலக்கை எட்டும் விதத்திலேயே பணிகள் நடைபெறுகின்றன. கொரோனா கிருமித்தொற்றால் கட்டுமானப் பணிகளில் சற்று தாமதம் ஏற்பட்டுள்ளது உண்மைதான்.

"ஆனால், 2025ஆம் ஆண்டில் இலக்குகளை எட்டும் திட்டத்தை பெருமளவு பாதிக்காது," என்று துறைமுகத்தின் வர்த்தகப் பிரிவுத் தலைவர் திரு சோ கோக் வெய் விளக்கினார்.

சாங்கி விமான நிலையத்துடன் ஒப்பிடும்போது சிங்கப்பூரின் துறைமுகங்கள் சுறுசுறுப்பாகவே இயங்கி வந்துள்ளன. அவை சென்ற ஆண்டின் ஜனவரியிலிருந்து ஜூன் வரையிலான காலகட்டத்தில் 20 அடி நீளமுள்ள 18 மில்லியன் கொள்கலன் சரக்குகளை கையாண்டன. அவை இவ்வாண்டின் அதே காலகட்டத்தில் சற்றே குறைவாக 17.8 மில்லியன் கொள்கலன் அளவு சரக்குகளை கையாண்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், சிங்கப்பூரின் பொருளியல் மீட்சியைக் கட்டுமானத் துறையே முன்னெடுத்துச் செல்லவிருப்பதாக 'சிஐஎம்பி' வங்கியைச் சேர்ந்த பொருளியல் நிபுணர் சோங் செங் வான் கூறியுள்ளார்.

எனினும், கட்டுமான ஊழியர்கள் தங்களின் தங்கும் விடுதிகளில் முடங்கியிருக்கும் நிலை இருந்ததால் அவர்கள் எவ்வளவு விரைவாக தங்களது பணிக்குச் செல்ல முடியும் என்பதைப் பொறுத்து பொருளியல் மீட்சி இருப்பதாக இவர் தெரிவிக்கிறார்.

சிங்கப்பூரின் கட்டுமானப் பணிகள் மெதுமெதுவாக மீண்டு வருவதாகவும் கட்டுமானத் துறையில் நீண்டகாலத் தேவை, கொரோன கிருமித்தொற்று பாதிப்பு இருந்தபோதும், வலுவாக உள்ளது என்றும் சொல்லும் இவர், கட்டுமானத் துறை ஊழியர்கள் அனைவரும் மீண்டும் பணிக்கு திரும்புவது அவசியம் என்றும் கூறுகிறார்.