'டீன் சேலஞ்ச் சிங்கப்பூர்' என்ற சீர்திருத்த மறுவாழ்வு நிலையத்தின் முன்னாள் ஊழியர் ஒருவருக்கு லஞ்சம் தொடர்பில் 11 வாரம் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. $980 அபராதம் செலுத்தும்படி அவருக்கு உத்தரவிடப்பட்டது.
ஓல்ட் சுவா சூ காங் ரோட்டில் இருக்கும் அந்தச் சீர்திருத்த மறுவாழ்வு நிலையத்தில் ராய் இவான் ராஜூ, 60, என்பவர் முன்பு வேலை பார்த்தார். அந்நிலையம், சமூக அடிப்படையிலான செயல்திட்டங்களில் சேர்க்கப்படும் இளம் கைதிகள் திருந்தி மறுவாழ்வு பெற உதவுகிறது.
ராய் இவான் ராஜூ, அந்த நிலையத்தில் தங்கி இருந்த 12 பேரிடம் இருந்து கடன் என்ற பெயரில் லஞ்சமாக சுமார் $3,000 வாங்கினார் என்று ஊழல் ஒழிப்பு புலன் விசாரணை இலாகா தெரிவித்தது. நிலையத்தில் தங்கி இருந்தவர்களிடம் பணம் வாங்கிக்கொண்டு அதற்குப் பதிலாக அவர்கள் விதிகளை மீறும்போது அது பற்றி மேலிடத்தில் தெரிவிக்காமல் இருக்க ராய் இவான், அவர்களுக்குச் சாதகமாக நடந்து கொள்வார் என்றும் தெரிவிக்கப்பட்டது.
இதர இரண்டு பேரிடம் கடன் பெற அவர் முயன்றார் என்றும் ஆனால் பணம் கிடைக்கவில்லை என்றும் இலாகா தெரிவித்தது.

