ஆட்குறைப்புக்கு ஆளாகும் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் (எஸ்ஐஏ) விமான நிறுவன ஊழியர்கள் தங்களது அனுபவத்தின் ஒவ்வோர் ஆண்டுக்கும் ஈடாக ஒரு மாதச் சம்பளத்தை அனுகூலமாகப் பெறுவார்கள் என்றும் அதன் உச்சவரம்பு 25 மாதங்களாக இருக்கும் என்றும் 'ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்' செய்தித்தாள் அறிகிறது.
அதிகபட்சம் 25 மாதச் சம்பளம் என்பது சுமார் ஈராண்டு காலம் பணியில் இருந்ததற்குச் சமம். அத்துடன், பாதிக்கப்படும் ஒவ்வோர் ஊழியருக்கும், பணியில் இருந்து விடுவிப்பதற்கான அவகாச காலத்திற்கு (நோட்டீஸ்) ஈடாகவும் தொகை வழங்கப்பட உள்ளது.
இத்தொகை மூன்று மாதச் சம்பளமாக இருக்கலாம். தொழிற்சங்கங்களுடன் செய்துகொள்ளப்பட்ட உடன்பாடுகளின் அடிப்படையில் இந்த அனுகூலன்கள் வழங்கப்படும் என்று தெரிகிறது.
கொவிட்-19 நோய் விமானப் போக்குவரத்தை முடக்கிவிட்ட நிலையில் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனம் தனது ஊழியர்களில் 4,300 பேரை அல்லது 20 விழுக்காட்டினரை ஆட்குறைப்பு செய்ய இருப்பதாக கடந்த வியாழக்கிழமை அறிவித்தது.

