வாரயிறுதி நாட்களில் கேலாங் சிராய் சந்தைக்குள் நுழைவதற்கான கட்டுப்பாடுகள் நீக்கப்பட்ட முதல் நாளான நேற்று நிலவரத்தைக் கண்டறிய ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் செய்திக்குழு காலை 8 மணிக்கு அங்கு சென்றது.
அப்போது சந்தைக்குள் நுழைய மக்கள் நீண்ட வரிசை பிடித்து நிற்பதைக் காண முடிந்தது. என்றாலும், சந்தைக்குள்ளே தனிநபர் இடைவெளியைக் கடைப்பிடிக்க வாடிக்கையாளர்களுக்குப் போதிய இடம் இருந்தது. தனிநபர் இடைவெளி கடைப்பிடிக்கப்படுவதை உறுதி செய்யும் தூதுவர்கள் ஆங்காங்கே காணப்பட்டனர்.
மதிய நேரத்திற்குள் சந்தைக்கு வெளியே மக்களின் வரிசை காணாமல் போய்விட்டது. சந்தைக்குள்ளேயும் கூட்டம் குறைந்துவிட்டது. பிற்பகலில் பெய்த மழை அதற்குக் காரணமாக இருக்கலாம் எனக் கூறப்பட்டது.
சந்தைக்குள் நுழைய கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டாலும் ஒரே நேரத்தில் சந்தைக்குள் அனுமதிக்கப்படுவோரின் எண்ணிக்கையில் வரம்பு உள்ளதால் கூட்ட நெரிசல் ஏற்படவில்லை என்று கடைக்காரர்கள் கூறினர்.
தங்கள் அடையாள அட்டையில் உள்ள கடைசி இலக்கத்தைப் பொறுத்து சந்தைக்குள் நுழைய மக்களை அனுமதிக்கும் நான்கு பிரபல ஈரச் சந்தைகளில் கேலாங் சிராய் சந்தையும் ஒன்று. புளோக் 104/105 யீசூன் ரிங் சாலையில் உள்ள சொங் பாங் சந்தை, புளோக் 20/21 மார்சிலிங் லேனில் உள்ள சந்தை, புளோக் 505 ஜூரோங் வெஸ்ட் ஸ்திரீட் 52ல் உள்ள சந்தை ஆகியவை மற்ற சந்தைகளாகும்.
இந்தச் சந்தைகளுக்குள் நுழைவதற்கான கட்டுப்பாடுகள் கடந்த ஏப்ரல் மாதம் அறிமுகப்படுத்தப்பட்டன. எனினும், ஆகஸ்ட் 13ஆம் தேதியிலிருந்து வார நாட்களில் அவை தளர்த்தப்பட்டன.
இனிமேல் வாரயிறுதி நாட்களில் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுவிட்டன. என்றாலும், ஒரே நேரத்தில் சந்தைக்குள் நுழைய அனுமதிக்கப்படுவோரின் எண்ணிக்கைக்கு வரம்பு விதிக்கப்பட்டுள்ளது.