ஈஸ்ட் கோஸ்ட் தொகுதியில் வசிக்கும் முதியவர்களுக்கு இன்னும் சிறந்த பல வசதிகள் கிடைக்க இருக்கின்றன.
பராமரிப்பாளர்கள், தொண்டூழியர்கள் அடங்கிய ஓர் ஆதரவுக் கட்டமைப்பும் அவர்களுக்கு உதவிக்கரம் நீட்ட இருக்கிறது.
மக்கள் மூப்படைவதற்கு ஒரு நல்ல இடமாக ஈஸ்ட் கோஸ்ட் குழுத்தொகுதியை ஆக்குவதற்கான திட்டம் இதற்கு வகை செய்கிறது.
'ஈஸ்ட் கோஸ்ட் முதியோர் திட்டம்' எனப்படும் அந்தத் திட்டம் நேற்று தொடங்கப்பட்டது.
தனியாக வாழ்ந்தாலும் முதியவர்கள் சுறுசுறுப்பான வாழ்வை நண்பர்களுடன், சமூகத்தாருடன் அனுபவிக்கும் வகையில் அந்த நகர் பல வசதிகளைக் கொண்டிருக்கும். அக்கம்பக்கத்தினர் முதியவர்களை நன்கு கவனித்துக் கொள்வார்கள்.
தொடக்கமாக அந்தத் தொகுதியில் வசிக்கும் முதியவர்களுக்கான தேவைகள் பற்றி நன்கு புரிந்துகொள்ள ஆய்வு ஒன்று நடத்தப்படும்.
அதேவேளையில், அந்தத் தொகுதியை முதியவர்களுக்குப் பாதுகாப்பானதாகவும் எளிதாக எட்டக்கூடியதாகவும் ஆக்குவதற்கான மேம்பாட்டு வசதிகளை முடிவு செய்ய நகரில் கணக்கெடுப்புகளும் நடத்தப்படும்.
ஈஸ்ட் கோஸ்ட் முதியோர் திட்டத்தை நேற்று காணொளி கூட்டம் மூலம் துணைப் பிரதமர் ஹெங் சுவீ கியட் அறிவித்தார்.
ஈஸ்ட் கோஸ்ட் குழுத்தொகுதியின் அடித்தள ஆலோசகரும் அந்தத் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினருமான திரு ஹெங், தீவிரமாக இதில் பங்கெடுத்துக் கொள்ளும்படி குடிமக்களை வலியுறுத்தினார்.
திரு ஹெங்கும் அவருடைய நான்காம் தலைமுறை அரசியல் தலைவர்களும் சென்ற ஆண்டு 'ஒன்றிணைந்த சிங்கப்பூர்' என்ற இயக்கத்தைத் தொடங்கினார்கள்.
கொள்கைகளை உருவாக்கும் போது அதில் குடிமக்களுக்கு அதிக பங்கையும் உரிமையையும் வழக்கமாக கொடுத்து வருவது அந்த இயக்கத்தின் நோக்கம்.
ஒவ்வொருவரும் ஒரு வேறுபாட்டைச் சாதிக்க முடியும் என்றும் எல்லாரும் சேர்ந்தால் பெரும் வேறுபாட்டை ஏற்படுத்தலாம் என்றும் திரு ஹெங் குறிப்பிட்டார்.
ஏதாவது ஒன்றை நாம் ஒவ்வொருவரும் வீட்டில் செய்தாலும் அல்லது அக்கம் பக்கத்தில் செய்தாலும் அல்லது பரந்த அளவில் சமூகத்தில் செய்தாலும் எல்லாரையும் ஒன்றிணைத்து செயல்பட்டு ஒரு நல்ல திட்டத்தை தீட்டி பொதுவான இலக்குடன் பாடுபட்டால் ஏராளமானவற்றை நாம் சாதிக்க முடியும் என்று தான் நம்புவதாக துணைப் பிரதமர் குறிப்பிட்டார்.
ஈஸ்ட் கோஸ்ட் பகுதியில் 190,000 மக்கள் வசிக்கிறார்கள். அவர்களில் 10ல் நான்கு பேருக்கு வயது 50 மற்றும் அதற்கும் மேல்.
ஈஸ்ட் கோஸ்ட் குழுத்தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான பிரதமர் அலுவலக அமைச்சர் மாலிக்கி ஒஸ்மான், துணை அமைச்சர் டான் கியட் ஹாவ், திருவாட்டி ஜெசிக்கா டான், திருவாட்டி செரில் சான் ஆகியோர் அந்த அடிப்படைத் திட்டத்தை விவரித்தனர்.
இந்தத் தொகுதியில் நடப்புக்கு வரக்கூடிய பல்வேறு செயல் திட்டங்களைப் பற்றி அவர்கள் குறிப்பிட்டனர். மக்களைச் சேர்த்து அவர்களுக்குப் பயிற்சி அளித்து தொண்டூழியர் கட்டமைப்பு பலப்படுத்தப்படும்.
ஒருவர் மற்றொருவரிடம் இருந்து கற்றுக்கொள்ளவும் வளங்களைப் பகிர்ந்துகொள்ளவும் சுகாதாரப் பராமரிப்பு, சமூகச் சேவைகளைப் பெறவும் ஏதுவாக பராமரிப்பாளர் ஆதரவுக் கட்டமைப்பு ஒன்றும் அமைக்கப்படும்.
மக்கள்தொகை மூப்படைவதால் நினைவாற்றல் இழப்பு நோய் பற்றிய கவலை அதிகரித்து வருகிறது.
ஆகையால் ஈஸ்ட் கோஸ்ட் பகுதியை இத்தகைய குறைபாடு உள்ளவர்களுக்குத் தோதான நகராக ஆக்குவதற்கான திட்டங் களும் இருக்கின்றன.
நினைவாற்றல் குறைவு காரணமாக பாதிக்கப்பட்டு உள்ளோருக்கு வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த எவை எவற்றைச் செய்யலாம் என்பதன் தொடர்பில் வீடு வீடாகக் கணக்கெடுப்பும் நடத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
வயது ஆக ஆக மக்களைத் துடிப்போடும் உடல்நலத்தோடும் வைத்திருக்க பல உதவிகளைச் செய்ய வேண்டியது முக்கியமானது என்பதை துணைப் பிரதமர் திரு ஹெங் வலியுறுத்தி கூறினார்.

