உயிர் துறப்புச் சம்பவம் ஒன்று நிகழ்ந்தால் அதைத் தொடர்ந்து குறைந்தபட்சம் இதர ஆறு பேர் பாதிக்கப்படுகிறார்கள் என்று மதிப்பிடப்படுகிறது.
ஆகையால் மன ரீதியில் பாதிக்கப்பட்டு இருப்போருக்குத் தேவைப்படும் அவசர ஆதரவை வழங்கவேண்டியது மிகவும் முக்கியமானது. அதுவும் இந்த கொவிட்-19 சூழலில் இந்த ஆதரவு இன்னும் முக்கியத்துவம் பெறுகிறது என்று அதிபர் ஹலிமா யாக்கோப் தெரிவித்தார்.
சிங்கப்பூர் அபய ஆலோசனைச் சங்கம் என்ற அமைப்பின் முதலாவது மெய்நிகர் பெருநடை நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்து அதிபர் உரையாற்றினார்.
மக்கள் தங்களைத் தாங்களே மாய்த்துக்கொள்வதைத் தடுக்கும் நோக்கத்துடன் உலகில் ஆண்டுதோறும் செப்டம்பர் மாதத்தில் உயிர் மாய்ப்புத் தடுப்பு புரிந்துணர்வு மாதம் கடைப்பிடிக்கப்படுகிறது.அதையொட்டி இந்தப் பெருநடைக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மெய்நிகர் பெருநடை இம்மாதம் 20ஆம் தேதி வரை நடக்கும். தனிமையாக அல்லது ஒதுக்கப்பட்டுவிட்டதாக உணர்கின்ற மக்களுக்கு உறுதுணையாக இருக்கிறோம் என்பதை மக்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு தெரியப்படுத்தலாம்.
இதில் பங்கெடுப்போர் மொத்தமாக 5.5 மில்லியன் காலடிகளை எடுத்துவைத்து ஆதரவை புலப்படுத்துவர் என்று இந்தச் சங்கம் நம்புகிறது.
தங்களைத் தாங்களே மாய்த்துக்கொள்ளும் சிந்தனையுடன் இருப்பவர்கள் அல்லது அத்தகைய சம்பவங்கள் மூலம் பாதிக்கப்பட்டு உள்ளவர்களுக்கு உதவ வசதியாக இந்த நிகழ்ச்சி மூலம் $150,000 திரட்டுவது இச்சங்கத்தின் இலக்கு.
மெய்நிகர் பெருநடையில் பங்கெடுக்க விரும்புவோர் www.howru.sg என்ற இணையத்தளத்தில் இலவசமாக பதிந்து கொள்ள லாம். 42Race Running & Fitness Club என்ற செயலியில் காலடிகள் எண்ணிக்கையைத் தாக்கல் செய்யலாம். இந்த இணையத்தளம் வழியாக நன்கொடை வழங்கலாம்.
பெருநடை ஒருபுறம் இருக்க, வாரம் முழுவதும் அன்றாடம் இணைய நிகழ்ச்சிகள் பலவும் நடக்கும். மன நலம் தொடர்பான குழு விவாதிப்புகள், மன உளைச்சலைச் சமாளிப்பது பற்றிய கலந்துரையாடல், நாடகம் பலவும் இவற்றில் அடங்கும். இந்தச் சங்கத்தின் சமூக ஊடகப் பக்கங்களில் மேல் விவரங்களைக் காணலாம்.
பெருநடை தொடக்க நிகழ்ச்சி நேரடியாக நேற்று ஃபேஸ்புக்கில் ஒளியேற்றப்பட்டது. இந்தச் சங் கத்தின் புரவலரான கல்வி அமைச்சர் லாரன்ஸ் வோங் அதில் கலந்துகொண்டார்.
இப்போதைய கொவிட்-19 சூழலில் சமூகத்தின் மன நலத் தேவைகள் உச்சத்தைத் தொட்டுள்ளன.
எடுத்துக்காட்டாக இந்தச் சங்கத்தின் 24 மணி நேர நேரடி தொலைபேசி மூலம் கடந்த மார்ச் முதல் மே வரை தொடர்புகொண்டவர்கள் எண்ணிக்கை, சென்ற ஆண்டு இதே காலத்துடன் ஒப்பிடுகையில் ஏறக்குறைய 25% கூடி இருக்கிறது என்று அமைச்சர் லாரன்ஸ் வோங் தெரிவித்தார்.

