வேலை தேடுவதற்கு முன் உங்களது பலம் என்ன பலவீனங்கள் என்ன என்பதை முதலில் ஆராய வேண்டும்.
Psychometric Tests போன்ற சோதனைகளில் ஈடுபட்டு இவற்றைக் கண்டறியலாம்.
குறிப்பிட்ட ஒரு வேலைக்கு விண்ணப்பம் செய்வதற்கு முன்பாக, எதற்காக அந்த வேலைக்கு விண்ணப்பிக்கிறேன், என்னுடைய பண்பு நலன்கள் இந்த நிறுவனத்துடன் ஒத்துப்போகுமா போன்ற கேள்வியை உங்களையே நீங்கள் கேட்டுக்கொள்ளுங்கள்.
இவ்வாறு செய்யும்போது உங்களது விருப்பத்திற்கும் வளர்ச்சிக்கும் ஏற்ற வேலைக்குத்தான் நீங்கள் விண்ணப்பிக்கிறீர்கள் என்பதை உறுதி செய்ய முடியும்.
தற்போதைய சூழலில் நிரந்தர வேலை கிடைப்பது சிரமமாக இருக்க, வேலைப் பயிற்சித் திட்டங்கள் அல்லது படிப்புக்கு தொடர்பில்லாத வேலையை மேற்கொள்ள முன்வரலாம்.
இவ்வாறு செய்யும்போது வேலை அனுபவம் கூடுகிறது. பொருளாதாரம் மேம்பட்டதும் இந்த வேலை அனுபவத்தைப் பயன்படுத்தி மற்ற வேலைகளுக்கு விண்ணப்பிக்கலாம்.
வேலைப் பயிற்சித் திட்டத்தில் சேர்பவர்களுக்குப் பயிற்சிப் படித்தொகை வழங்கப்படும். இதன் வழி ஓரளவு நிதி ஆதரவும் கிடைக்கும்.
வேலைக்கு விண்ணப்பம் செய்யும்போது உங்களுக்கு எத்தகைய திறன்கள் உள்ளன, அவை எவ்வாறு நீங்கள் பணிசெய்ய இருக்கும் நிறுவனத்திற்கு உதவும் என்பதை ஆராயவும்.
எஸ்ஜி ஒற்றுமை வேலைகள், திறன்களுக்கான தொகுப்புத்
திட்டம் (SGUnited Jobs and Skills Package) வழி பல வேலைகள், வேலைப் பயிற்சித் திட்டங்கள், திறன் மேம்பாட்டு வாய்ப்புகள் உள்ளன.
கொவிட்-19 நெருக்கடிநிலை பல துறைகளை வெகுவாகப் பாதித்துள்ளது.
இருப்பினும், மின்வர்த்தகம், உற்பத்தி, தகவல் தொடர்பு தொழில்நுட்பம், சுகாதாரச் சேவைகள், சமூக சேவைகள், நிதிச் சேவைகள் ஆகிய துறைகளில் நல்ல வேலை வாய்ப்பு கள் உள்ளன.
இது உங்களுக்குப் பழக்கப்பட்ட துறை இல்லை என்றாலும் பரந்த மனப்பான்மையுடன் புதிய பணிகளை மேற்கொள்ள முன்வரலாம்.
வேலை தேடுவதில் சிக்கல் ஏற்பட்டால் சிங்கப்பூர் ஊழியரணி வேலை வாய்ப்பு வழிகாட்டியை (Career Coach) சந்திக்கப் பதிவு செய்யலாம்.
உங்களது பட்டப்படிப்பு பாடத்திட்டத்தில் எல்லாத் துறைகளுக்கும் பொருந்தும் ஆராய்ச்சித் திறன், எழுத்துத் திறன், பேச்சுத் திறன் போன்ற பொதுவான திறன்களும் கற்பிக்கப்படுகின்றன.
ஆதலால், படிப்புக்கு தொடர்பில்லாத வேலை வாய்ப்புகளையும் பரிசீலிக்க முன்வரவும்.
குறிப்புகள் வழங்கியவர்:
சிங்கப்பூர் ஊழியரணி வேலை வாய்ப்பு வழிகாட்டி
திருமதி விமலா ராமசாமி (படம்).
படம்: சிங்கப்பூர் ஊழியரணி அமைப்பு
வேலை தேடும் இளம் பட்டதாரிகளுக்கு Diamond Glass Enterprise நிறுவனக் குழுமத்தின் தலைமை நிர்வாக அதிகாரி திரு கேசவன் சத்தியமூர்த்தி, 41, ஆலோசனை வழங்கியுள்ளார்.
“வேலைச் சந்தை முன்பை போல் இருக்காது என்பதை இளம் பட்டதாரிகள் உணர வேண்டும்.
“சம்பள எதிர்பார்ப்புகளைகுறைத்துக்கொள்ள வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
“ஆட்குறைப்புகளும் அதிகரித்து வரும் வேளையில், வேலை தேடுபவர்களின் எண்ணிக்கை வெகுவாக உயர்ந்துஉள்ளது.
“வேலை அனுபவம் கொண்ட பலர் இளம் பட்டதாரிகளுடன் வேலைக்காகப் போட்டியிடுகின்றனர்.
“இதனால் இளம் பட்டதாரிகள் தங்களது தனித்துவத்தை வெளிக்காட்ட முயற்சி எடுக்க வேண்டும்.
“வேலை நேர்முகத் தேர்வுகளில் சிறப்பாக செய்ய பயிற்சி எடுக்கவேண்டும்.
“நேர்முகத் தேர்வுகளில் நிறுவன அதிகாரிகளைக் கவரும் வகையில் பேச வேண்டும். திறன் மேம்பாட்டு பயிற்சிகளில் ஈடுபடுவது அவசியம்.
“தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்றவாறு இளைஞர்கள் தங்களது அறிவாற்றலையும் திறன்களையும் மேம்படுத்திக்கொள்ளவேண்டும்.
பயிற்சி வகுப்புகள், இணையக் கருத்தரங்குகள் என பல்வேறு வழிகளில் புத்தாக்கத் திறனையும் பங்காளித்துவத்தையும் அதிகரித்துக்கொள்ளத் தயாராக இருக்க வேண்டும். இதுபோன்ற பல திறன்வாய்ந்தவர்களையே நிறுவனங்கள் விரும்புகின்றன,” என்றார் திரு கேசவன்.