எஸ்ஜி யுனைடெட் வேலை தேர்ச்சித் திட்டத்தின் கீழ் கடந்த ஏப்ரல் முதல் துல்லிய பொறியியல் துறையில் ஏறக்குறைய 1,000 வேலைகள் கிடைத்துள்ளன.
அந்த வேலைகளில் ஐந்தில் ஏறக்குறைய நான்கு வேலைகள், நிபுணர்கள், நிர்வாகிகள், மேலாளர்கள், தொழில்நுட்பர் கள் (பிஎம்இடி) ஆகியோருக்கு உரியவையாக இருந்தன.
பிஎம்இடி ஊழியர்கள் சுமார் 750 பேர் உற்பத்தித்துறை பொறியாளர்கள், மின் மற்றும் மின்னியல் பொறியாளர்கள், தர உத்தரவாத பரிசோதனை அதிகாரிகள் போன்ற பதவிகளில் அமர்ந்தனர். உற்பத்தித்துறை ஊழியர்கள், பற்ற வைப்பவர்கள், குழாய் பொருத்துபவர்கள் போன்ற வேலைகளில் 230 பேர் சேர்ந்தனர்.
இவை ஒருபுறம் இருக்க, துல்லிய பொறியியல் துறையில் சுமார் 440 பயிற்சி வாய்ப்புகளும் வேலையிட பயிற்சியும் நிறுவனங்களின் உதவியுடன் உருவாக்கித் தரப்பட்டன. இவற்றில் பிஎம்இடி ஊழியர்களுக்கு 360 வேலைகளும் மற்றவர்களுக்கு 80 வேலைகளும் கிடைத்தன. 80 பயிற்சி வாய்ப்புகளில் 60 பிஎம்இடி ஊழியர்களுக்கும் 20 மற்றவர்களுக்கும் சென்றன.
துல்லிய பொறியியல் துறையில் பிஎம்இடி வேலைகளுக்கான சம்பளம் ஒவ்வொரு வேலையின் இயல்பை பொறுத்தும் தேவைப்படும் தேர்ச்சிகளைப் பொறுத்தும் மாறுபட்டு இருக்கிறது.
எடுத்துக்காட்டாக, தொழில்துறை மற்றும் உற்பத்தித் துறை பொறியாளர்கள் மாதம் $2,600 முதல் $6,000 வரை சம்பாதிக்கக்கூடும். உற்பத்தித் துறையைச் சேர்ந்த பொறியியல் நிபுணர்கள் $1,500 முதல் $2,350 வரை ஊதியம் பெறக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.
இதனிடையே, எஸ்ஜி யுனைடெட் வேலை மற்றும் தேர்ச்சித் திட்டத்தின் வழியாக துல்லிய பொறியியல் துறையில் 260க்கும் அதிகம் பேர் இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் ஜூலை வரை வேலைகளைப் பெற்று இருக்கிறார்கள் என்பதை மனிதவள அமைச்சர் ஜோசஃபின் டியோ தன்னுடைய வாராந்திர வேலைச் சூழல் அறிக்கையில் சுட்டினார்.
இப்படி வேலை பெற்றவர்களில் ஐந்து பேரில் இரண்டு பேர் ஒரு தொழில்துறையை விட்டு வேறு ஒரு தொழில்துறைக்கு மாறியவர்கள் என்று அவர் குறிப்பிட்டார்.
ஏப்ரல் முதல் 30க்கும் அதிகமானோர் நிறுவனங்களின் ஆதரவுடன் பயிற்சி வாய்ப்புகளையும் வேலையிட அனுபவ வாய்ப்புகளையும் பெற்றனர்.
இந்தத் தொழில்துறைக்கு வந்த புதியவர்களைப் பொறுத்தவரையில் வாழ்க்கைத் தொழில் மாற்றுச் செயல் திட்டம் மூலம் அவர்கள் உதவி பெறுகிறார்கள்.
கொவிட்-19 காரணமாக நிலவரங்கள் சரியில்லை என்றாலும் துல்லிய பொறியியல் துறை இந்த ஆண்டு ஜனவரி முதல் ஜூலை வரை 11.4 விழுக்காடு வளர்ந்து உள்ளதையும் அமைச்சர் சுட்டினார்.
இத்துறையில் மருத்துவத் தொழில்நுட்பம், கணினிச் சில்லு துறைகளைச் சேர்ந்த நிறுவனங்கள் சிறப்பாகச் செயல்பட்டு இருக்கின்றன.
திரு டிம் டான், 56, என்பவர் துல்லிய பொறியியல் துறைக்குப் புதியவர். முன்பு இவர் எண்ணெய் மற்றும் எரிவாயு தொழில்துறையில் வேலை பார்த்தார்.
வேலை இழந்தவர்களுக்குப் பொருத்தமான வேலையைப் பார்த்துத் தரும் அரசு திட்டத்தின் உதவியுடன் இவர் முப்பரிமாண அச்சு சேவைத் துறையில் செயல்முறை நிர்வாகியாக சேர்ந்தார். பிறகு இவர் ஆறுமாத நிபுணத்துவ வாழ்க்கைத் தொழில் மாற்றச் செயல் திட்டத்தில் சேர்ந்து தயா ரிப்புத் துறை பொறியாளராக ஆனார்.