மனிதவள அமைச்சின் கீழ் புதிதாக அமைக்கப்பட்ட ‘உத்தரவாதம், பராமரிப்பு மற்றும் ஈடுபாடு’ (ஏஸ்) குழுவுடன் நேற்று பிரதமர் லீ சியன் லூங் மெய்நிகர் சந்திப்பு நிகழ்த்தினார். அனைத்து அமைப்பு பணிக்குழுவுக்குப் (ஐடிஎஃப்) பதிலாக இப்புதிய பிரிவு செயல்படவுள்ளதாகக் கூறப்பட்டது.
வெளிநாட்டு ஊழியர் தங்கும் விடுதிகளில் கொவிட்-19 செயல்பாடுகளில் ஈடுபட்டு வரும் ‘ஐடிஎஃப்’ குழுவுக்கும் ‘ஏஸ்’ பிரிவுக்கும் பிரதமர் தமது நன்றியைத் தெரிவித்துக்கொண்டார்.
இனி ‘ஏஸ்’ பிரிவு மேலும் நிரந்தரமான ஓர் ஏற்பாட்டை நோக்கிச் செல்வதாகக் கூறினார்.
வெளிநாட்டு ஊழியர்கள் வேலைக்குத் திரும்பும் நிலையில் அவர்கள் பாதுகாப்புடன் வேலை செய்வது, வாழ்வது, ஓய்வு எடுப்பது போன்றவற்றில் கவனம் செலுத்த வேண்டும் என்று திரு லீ அறிவுறுத்தினார். இந்த அம்சங்களில் கவனம் செலுத்தினால் கொவிட்-19 மீண்டும் வரும் சூழலைத் தவிர்க்கலாம் என்றார் அவர்.