நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகமும் (என்டியு) எஸ்டி இன்ஜினியரிங் நிறுவனமும் இணைந்து சிங்கப்பூரின் முதலாவது தடையில்லா அறிவார்ந்த கார் நிறுத்தத்தை நேற்று அறிமுகப்படுத்தின.
இதன் மூலம் என்டியு வளாகத்தின் எந்த கார் நிறுத்தத்திலும் கார் நிறுத்துவது எளிதாக்கப்பட்டுள்ளது.
டிக்கெட் இல்லாத, தடையில்லாத இந்த அறிவார்ந்த கார் நிறுத்தும் முறையை எஸ்டி இன்ஜினியரிங் நிறுவனம், 'கோபார்கின்' கைபேசிச் செயலியுடன் இணைந்து உருவாக்கியுள்ளது.
காரின் பதிவு எண்ணைத் தானாகக் கண்டறிதல், தரவுப் பகுப்பாய்வு, நகரும்போதே கட்ட ணத்தைச் செலுத்தும் முறை ஆகிவற்றை இந்தப் புதிய திட்டத்தின்படி செயல்படுத்த முடியும்.
"புதிய அறிவார்ந்த கார் நிறுத்தத் தளம் அன்றாட வாழ்க்கையை மேம்படுத்த தொழில்நுட்பம் சார்ந்த தீர்வுகளைப் பயன்படுத்த புத்தாக்கம் எந்த அளவுக்கு உதவுகிறது என்பது நல்ல உதாரணம். இந்த அறிவார்ந்த கார் நிறுத்த முறையால் எங்கள் வளாகத்துக்கு வரும் வருகையாளர்களின் பயண அனுபவமும் மேம்படும்," என்றார் என்டியுவின் தலைவர் பேராசிரியர் சுப்ரா சுரேஷ்.
இந்த வசதியைப் பயன்படுத்த வாகனமோட்டிகள் 'கோபார்கின்' கைபேசிச் செயலியைப் பதிவிறக்கம் செய்துகொள்ள வேண்டும். அதில் கடன்/பற்று அட்டையின் விவரங்களைப் பதிவு செய்ய வேண்டும்.
அருகில் உள்ள கார் நிறுத்தம் அங்கு கார் நிறுத்த எவ்வளவு கட்டணம் என்பதை கைபேசிச் செயலி மூலம் தெரிந்துகொள்ளலாம். இது கார் நிறுத்தத்தைத் தேடும் நேரத்தைக் குறைக்கும்.
இதுவரை என்டியுவின் பிரதான ஜூரோங் வளாகத்தின் மூன்று கார் நிறுத்தங்களில் இந்த முறை பயன்பாட்டில் உள்ளது.

