பொது இடத்தில் ஒழுங்கற்ற முறையில் நடந்துகொண்டதற் காகவும் திருடிய குற்றத்துக்காகவும் நடிகரும் பாடகருமான அலிஃப் அஸிசுக்கு இரண்டு வாரச் சிறையும் $500 அபராதமும் இன்று விதிக்கப்பட்டது.
தம்மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளை திரு அஸிஸ் கடந்த மாதம் 7ஆம் தேதி ஒப்புக்கொண்டார்.
2014ல் இரண்டு கைபேசிகளைத் திருடியதற்காக அவருக்கு $2,000 அபராதம் விதிக்கப்பட்டது.
சென்ற ஆண்டு ஜூன் மாதம் 7ஆம் தேதி ஹேவ்லக் ரோட்டில் உள்ள ஸ்டுடியோ எம் ஹோட்டலில் ஓர் அறையில் தங்கி இருந்த இந்தோனீசியாவைச் சேர்ந்த ராஜா யுனிகா பிரதான புத்ரி, 32, என்ற நடிகையின் பையில் இருந்து $300 மற்றும் ஒரு மில்லியன் ரூப்பியா (S$94) பணத்தைத் திருடினார்.
சென்ற ஆண்டு நவம்பர் மாதம் 10ஆம் தேதி அதிகாலை சுமார் 5.30 மணிக்கு ஆர்ச்சர்ட் டவர்ஸ் கடைத்தொகுதி இணைப்புப் பாலத்தில் இந்த நடிகர் சத்தம் போட்டபடி யாரோயோ நோக்கி சைகை காட்டியபடி இருந்ததை போலிஸ் அதிகாரி சார்ஜண்ட் தியோடோர் லீ கண்டார்.
போலிஸ் அதிகாரியின் ஆலோசனையைக் கேட்டு அமைதியான நடிகர், ஒரு மணி நேரம் கழித்து பக்கத்தில் இருந்த ஒரு டாக்சியின் கதவில் உதைத்தார். பிறகு அவர் கைதானார்.