சமய நல்லிணக்கத்துக்கான அதிபர் மன்றத்தின் உறுப்பினர்கள் பத்து பேரும் மேலும் மூன்று ஆண்டுகளுக்கு மன்றத்தில் அங்கம் வகிக்க மறுநியமனம் பெற்றுள்ளனர். அந்தப் பதவிக்காலம் நேற்றிலிருந்து தொடங்கியது.
உச்ச நீதிமன்றத்தின் நீதிபதி சாவ் ஹிக் டின், மன்றத்தின் தலைவராகத் தொடர்ந்து செயல்படுவார்.
சமய நல்லிணக்கப் பராமரிப்புச் சட்டத்தின் அடிப்படையில் இந்த மன்றம் உருவாக்கப்பட்டது. அதன் உறுப்பினர்கள் அதிபர் ஹலிமா யாக்கோப்பால் நியமிக்கப்பட்டனர். சிங்கப்பூரில் சமய நல்லிணக்கம் தொடர்பில் உள்துறை அமைச்சருக்கு ஆலோசனை வழங்குவதுதான் சமய நல்லிணக்கத்துக்கான அதிபர் மன்றத்தின் முக்கிய பணி.
சிங்கப்பூரின் முஃப்தி டாக்டர் நஸிருடின் முகம்மது நசிர், சிங்கப்பூர் ரோமன் கத்தோலிக்க பேராயர் வில்லியம் கோ, சிங்கப்பூர் பௌத்த சம்மேளனத்தின் தலைவர் தவத்திரு செக் குவாங் பிங், சிங்கப்பூர் தேவாலயங்கள் மன்றத்தின் முன்னாள் தலைவரான ஓய்வுபெற்ற கௌரவ ஆயர் வீ பூன் ஹப், சிங்கப்பூர் சீக்கியர் வாரியத்தின் தலைவர் திரு சுர்ஜித் சிங், சிங்கப்பூர் இந்திய வர்த்தக தொழில் சபையின் முன்னாள் தலைவர் திரு எம். ராஜாராம், சிங்கப்பூர் தாவோசிய சம்மேளனத்தின் ஆலோசகரான பேராசிரியர் லீ சியுக் இன், உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி அலுவலகத்தின் தலைமை நிர்வாகி ஜுதிகா ராமநாதன், சிங்கப்பூர் நிர்வாகப் பல்கலைக்கழகத்தின் தலைவர் பேராசிரியர் லில்லி கோங் ஆகியோரே மன்றத்தின் பத்து உறுப்பினர்களாவர்.