கொரோனா கொள்ளை நோயால் ஏற்படவுள்ள பொருளியல் வீழ்ச்சிக்குத் தன்னை ஆயத்தப்படுத்திக் கொள்வதற்காக யுனைடெட் ஓவர்சீஸ் பேங்க் (யுஓபி) சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துள்ளது. அதன் ஊழியர்களின் சம்பள உயர்வை நிறுத்தி வைத்திருப்பதுடன் வேலைக்கு ஆள் சேர்க்கும் பணியையும் கட்டுப்படுத்திக் கொண்டுள்ளது.
ஊழியர்களது வாழ்வாதாரங்களைப் பாதுகாப்பதை முக்கியமாகக் கருதுவதால் அவர்கள் தற்போது பெறும் சம்பளத்தில் மாற்றம் இருக்காது என்றும் சூழல் மேம்படும்போது இதன் தொடர்பான தன் நிலைப்பாட்டை வங்கி மறுஆய்வு செய்யும் என்றும் வங்கியைச் சேர்ந்த டீன் டோங் தெரிவித்தார். புதிதாக ஊழியர்களைப் பணியில் அமர்த்த நேரிட்டால், அது உயர் பதவிகளின் ஒப்புதலுடன் நடக்கும் என்றும் கூறினார்.
சீனா, ஹாங்காங், தாய்லாந்து, மலேசியா என 19 நாடுகளில் யுஓபி இயங்கி வருகிறது. 26,000க்கும் மேற்பட்ட ஊழியர்கள் வங்கியின்கீழ் பணியாற்றுகிறார்கள்.
புதிய திறன்களைக் கற்றுக்கொள்வதுடன் ஊழியர்களின் திறன் மேம்பாட்டிலும் தொடர்ந்து வங்கி முதலீடு செய்யும் என்றார் திரு டோங். அரசாங்கம் அதன் ஆதரவுத் திட்டங்களை நிறுத்திக்கொள்ளும்போது நிலைமை மோசமாகும் என்று எதிர்பார்ப்பதாக வங்கி அதன் மூத்த ஊழியர்களுக்குத் தெரிவித்தது என புளூம்பெர்க் நிறுவனம் நேற்று கூறியது.
வேலை நியமனம் சற்று மெதுவடைந்திருந்தாலும் அதன் பயிற்சித் திட்டத்தில் 320 இடங்களை உருவாக்கி இருப்பதாக யுஓபி தெரிவித்தது.