சுற்றுச்சூழல் குழுக்களுக்கு சிங்கப்பூர் ஏர்லைன்சின் (எஸ்ஐஏ) புதிய ‘மகிழ்உலா விமானத் திட்டம்’ கவலையை ஏற்படுத்தியுள்ளது.
சாங்கி விமான நிலையத்திலிருந்து கிளம்பி, வானில் சற்று நேரம் சுற்றி வந்த பின் மீண்டும் அதே விமான நிலையத்தில் தரையிறங்கும் இத்திட்டத்தின் பெயர் ‘ஃபிளைட் டு நோவேர்’. சுமார் மூன்று மணி நேரம் நீடிக்கக்கூடிய இந்த விமானப் பயணங்களை நடப்புக்குக் கொண்டு வர எஸ்ஐஏ ஆலோசித்து வருகிறது.
இருப்பினும் இந்த விமானங்களால் தேவையற்ற கரியமில வெளியீடு இருக்கும் என்றும் இதனால் தற்போதைய பருவநிலை மாற்றத்திற்கு நெருக்கடி கூடும் என்றும் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கூறுகின்றனர். பொருட்கள் அதிகம் இல்லாமல் பயணிகள் மட்டுமே உள்ள விமானங்கள் அதிக எடை இருக்காது என்பதால் கரியமில வெளியீடு குறைவாக இருக்கும் என்றார் ஒரு நிபுணர்.
கொவிட்-19 நெருக்கடி காலத்தில் எஸ்ஐஏ தற்போது மோசமான நிலைமையில் உள்ளது. அத்துடன் அண்மையில் அதன் ஆட்குறைப்புப் பணிகளும் தொடங்கின.
இந்நிலையில் மகிழ்உலா விமானங்களுக்குப் பதிலாக மாற்று யோசனைகள் உள்ளதா என பொதுமக்களிடமிருந்து கருத்துகள் திரட்டப்பட்டு வருகின்றன.
விமானத்தில் அமைந்துள்ள விமானியின் அறைக்குக் கல்வி சுற்றுலா, விமானிகளின் வழிகாட்டலில் விமானப் பயணப் பாவனை பயிற்சிகள், விமானத்தில் அமர்ந்தவாறு அறுசுவை உணவு உண்ணும் அனுபவம், முதல்தர சிற்றறைகளில் தங்கும் வாய்ப்பு போன்ற யோசனைகளைப் பொதுமக்களில் சிலர் முன்வைத்துள்ளனர்.