விடுமுறைக் காலம் நெருங்கி வரும் வேளையில் தடையில்லாச் சேவைகளை வழங்கவும் போட்டித்தன்மைமிக்க விலைகளை வழங்கவும் தனது பொட்டல விநியோகச் சேவைக்கான விலைகளை சிங்போஸ்ட் நிறுவனம் மாற்றியமைத்துள்ளது.
புதிய விலைப் பட்டியல் அடுத்த மாதம் 15ஆம் தேதியிலிருந்து நடப்புக்கு வரும்.
அதில் பெரும்பாலான உள்ளூர் பொட்டல விநியோகச் சேவைக்கான விலைகள் குறைக்கப்படும். அனைத்துலகப் பொட்டல விநியோகச் சேவைக்கான விலையும் பெரும்பாலான வாடிக்கையாளர்களுக்குக் குறைக்கப்படும் என்று சிங்போஸ்ட் நேற்று தெரிவித்தது.
தபால் பெட்டிகளுக்குள் போடக்கூடிய சிறிய பொட்டலங்களுக்கான தற்போதைய விநியோகச் சேவையின் விலை, பொட்டலத்தின் எடையைப் பொறுத்து 90 காசிலிருந்து $3.50 வரை உள்ளது.
அடுத்த மாதம் 15ஆம் தேதியிலிருந்து 2 கிலோ எடைக்குள் இருக்கும் அனைத்துப் பொட்டலங்களுக்கான விநியோகச் சேவையின் விலை $1.50ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதன்படி கனமான பொட்டலங்களுக்கான விநியோகச் சேவை மலிவாக இருக்கும்.
100 கிராமிலிருந்து 250 கிராம் எடை கொண்ட பொட்டலங்களை அனுப்புவோர் கூடுதல் பணம் செலுத்த வேண்டும். அனுப்பப்படும் பொட்டலங்கள் எங்கே இருக்கிறது என்பதைக் கண்டறிய விரும்புவோர் $3 செலுத்தவேண்டும். தற்போது
இந்தச் சேவைக்கான விலை $3.20லிருந்து $4.80 ஆகும்.
தபால்தலைகளுக்கான பணம் ஏற்கெனவே செலுத்தப்பட்ட கடித உறைகளின் விலைகளும் குறைக்கப்படுகின்றன. தற்போது 500 கிராம் எடை வரை உள்ள பொட்டலங்களுக்கான பாலி மெயிலர் சேவையின் விலை $2ஆக உள்ளது. ஒரு கிலோ எடை கொண்ட பொட்டலங்களுக்கான விநியோகச் சேவை $2.90. அடுத்த மாதம் 15ஆம் தேதியிலிருந்து இரண்டு கிலோ வரை எடை கொண்ட அனைத்துப் பொட்டலங்களுக்கான பாலி மெயிலர் சேவையின் விலை $2ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
அனைத்து அடிப்படை விநியோகப் பொட்டலங்களும் இரண்டு வேலை நாட்களுக்குள் விநியோகம் செய்யப்படும். தற்போது அவை மூன்று வேலை நாட்களுக்குள் விநியோகம் செய்யப்படுகின்றன.