உட்லண்ட்ஸில் சாலை நடுவே நேற்று பிற்பகலில் கார் ஒன்று தீப்பிடித்து எரிந்ததைத் தொடர்ந்து ஆடவர் ஒருவர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.
‘எஸ்ஜி ரோடு விஜிலண்ட்’ என்னும் ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவேற்றப்பட்ட காணொளியில் காரில் தீ மளமளவென பரவி எரிவதும் அதிலிருந்து கரும்புகை எழுவதும் தெரிந்தது.
ஓட்டுநரின் கதவு திறந்தநிலையில் இருந்தது.
உட்லண்ட்ஸ் அவென்யூ 1ம் அவென்யூ 2ம் சந்திக்கும் சாலையில் தீ விபத்து ஏற்பட்டிருப்பதாகவும் அதுகுறித்து தங்களுக்கு நேற்று பிற்பகல் 2.10 மணியளவில் தகவல் கிடைத்தது என்றும் சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை கூறியது.
காரில் எவ்வாறு தீப்பற்றியது என்பது குறித்து விசாரிக்கப்பட்டு வருவதாகவும் அது குறிப்பிட்டது.
விபத்தைத் தொடர்ந்து 59 வயது ஓட்டுநர், கூ டெக் புவாட் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டதாகவும் அப்போது அந்த ஆடவர் சுயநினைவுடன் இருந்ததாகவும் போலிஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
காரின் இயந்திரப் பகுதியில் தீப்பற்றி எரிந்துகொண்டு இருந்ததாகவும் அதனை தீயணைப்பாளர்கள் அணைத்து கட்டுப்படுத்தியதாகவும் சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை தெரிவித்தது.