அதிக தூரம் பறந்து, பெரிய பரப்பளவில் பாதுகாப்புக் கண்காணிப்புகளை மேற்கொள்ளக்கூடிய புதிய ஆளில்லா வானூர்தியை உள்துறை அமைச்சுக் குழு நேற்று வெளியிட்டது.
முன்கூட்டியே திட்டமிடப்பட்ட பாதையின் அடிப்படையில் செயல்படும் இந்த ஆளில்லா வானூர்தி, நேற்று தனது முதல் நீண்டதூர பயணத்தை மேற்கொண்டது.
இது இயக்குபவரின் பார்வைக்கு அப்பால், அதாவது அதை இயக்குபவரிடமிருந்து பல கிலோ மீட்டர் தூரம் பறக்கக்கூடியது.
முதல் ஆளில்லா வானூர்தி துவாஸ் வியூ தீயணைப்பு நிலையத்திலிருந்து புறப்பட்டு 8 கிலோ மீட்டர் தூரத்தை 20 நிமிடங்களில் கடந்தது.
உள்துறை அமைச்சுக் குழுவின் அறிவியல், தொழில்நுட்ப முகவையும் (எச்டிஎக்ஸ்) ‘எஸ்டி என்ஜினியரிங் ஏரோஸ்பேஸ்’ நிறுவனமும் இணைந்து நீண்டதூரம் பறக்கக்கூடிய இந்த ஆளில்லா வானூர்தியை உருவாக்கி உள்ளன.
இந்தப் புதிய தொழில்நுட்பத்தின் மூலம், உள்துறை அமைச்சுக் குழு முகவைகள் பெரிய அளவிலான பகுதிகளில் கண்காணிப்பை மேலும் மேம்படுத்தி இத்திறன்களைப் பயன்படுத்த முடியும்.
அணுக முடியாத பகுதிகளில் அல்லது சோதனை நடவடிக்கைகளை நேரில் மேற்கொள்வது மிகவும் ஆபத்தான சூழ்நிலை போன்ற நேரங்களில் உள்துறை அமைச்சுக் குழு குழு இத்தகைய ஆளில்லா வானூர்திகளைப் பயன்படுத்தலாம்.
ஆளில்லா வானூர்திகள் அதிகாரிகள் பார்த்து நிலவரத்தை ஆராய ஏதுவாக போலிஸ் நடவடிக்கை தளபத்திய மையத்திற்கு நேரடியாக தகவல்களை வழங்கும். அதாவது, சம்பவ தளங்களின் நிகழ்நேர சூழ்நிலை படங்களையும், பெரிய அளவிலான அல்லது உயர் பாதுகாப்பு நிகழ்வுகளின் பெரிய கூட்டங்களின் முழுமையான காட்சியையும் வழங்கும்.
அபாயகரமான பொருட்களைக் கண்டுபிடிப்பதிலும், மேலே இருந்து பெரிய தீயைக் கண்காணிப்பதிலும் ஆளில்லா வானூர்திகள் பங்கு வகிக்கலாம்.
மேலும், இதற்கு கட்டட இடிபாடு போன்ற பேரிடர்களின்போது அத்தியாவசிய பொருட்களை வழங்குவதற்கான திறனை ஏற்படுத்த மேம்பாட்டாளர்கள் செயல்பட்டு வருகின்றனர்.
இது இடர்பாடுகளின்போது, செயலில் இறங்கும் நேரத்தை விரைவாக்கி, உயிர்களைக் காப்பாற்ற உதவலாம்.
துவாஸ் வியூ தீயணைப்பு நிலையத்தில் ‘பிவிஎல்ஓஎஸ் யுஏவி’ என்ற இந்த ஆளில்லா வானூர்தியின் செயல்பாட்டை உள்துறை, சட்ட அமைச்சர் திரு கா.சண்முகம் நேற்று பார்வையிட்டார்.
“இந்த மேம்பாடு, உள்துறை அமைச்சுக் குழுவின் அதிநவீன தொழில்நுட்பப் பயன்பாட்டில் ஒரு முக்கிய மைல்கல்,” என்று அவர் கூறினார்.
“எச்டிஎக்ஸ் மற்றும் உள்துறை அமைச்சுக் குழுத் துறைகள் தொடர்ந்து சிங்கப்பூரைப் பாதுகாப்பாக வைத்திருப்பதில் உள்துறை அமைச்சுக் குழுவின் செயல்திறனை மேம்படுத்த தொழில்நுட்பத்தை பயன்படுத்துவதற்கான வழிகளைக் கண்டறிய வேண்டும்,” என்று அமைச்சர் சண்முகம் தெரிவித்தார்.
கொவிட்-19 கிருமிப் பரவல் முறியடிப்பு காலத்தின்போது இதுபோன்ற ஆளில்லா வானூர்திகள் உதவியாக இருந்தன.
சிங்கப்பூர் போலிஸ் படை கண்காணிப்பில் ஆளில்லா வானூர்திகளையும் பயன் படுத்தியது.
இந்த பிவிஎல்ஓஎஸ் ஆளில்லா வானூர்திகளை துவாஸ் தெற்கில் உள்ள தொழிற்பேட்டை பகுதிகளைச் சுற்றிய கண்காணிப்பு நடவடிக்கைகளுக்கு உபயோகித்தது.
நீண்டதூரங்களையும் பெரிய பகுதிகளையும் கண்காணிக்க இந்த ஆளில்லா வானூர்திகள் உதவின.
இவற்றை தேவைக்கேற்ப வடிவமைப்பதில் எச்டிஎக்ஸ் தற்போது பல்வேறு உள்துறை அமைச்சுக் குழு துறைகளுடன் இணைந்து செயல்படுகிறது.
இந்த ஆளில்லா வானூர்தி கட்டுப்படுத்தும் கட்டுப்பாட்டு பெட்டியில் மின்னூட்டம் பெற்ற பேட்டகள் இருக்கும். அடுத்த கட்ட நடவடிக்கைக்கு வானூர்தியை தயார்படுத்த பேட்டரிகளை எளிதில் மாற்றிவிடலாம் என்று தெரிவிக்கப்பட்டது.