சுய தேர்வு முறையில் நாடகப் பயிற்றுவிப்பாளராக 5 ஆண்டுகள் பணியாற்றிய குமாரி ஆயிஷா ஷேக், கற்றலில் சிரமங்களை எதிர்கொள்ளும் மாணவர்களை அடிக்கடி எதிர்கொண்டார். வாசிப்பதற்கும் வகுப்பில் பங்கேற்பதற்கும் அவர்கள் சிரமப்பட்டனர்.
அந்த அனுபவம், கற்றல் முறை சிகிச்சை மூலம் சிறப்புப் பட்டயக் கல்வி பயில அவரைத் தூண்டியது.
சிங்கப்பூர் டிஸ்லெக்சியா சங்கத்தின் கல்வியகத்தில் சிறப்புத் தேவையுடைய பிள்ளைகளுக்கான கல்வியாளர்களாக நேற்று பட்டயம் பெற்ற 59 பேரில் 27 வயது ஆயிஷாவும் ஒருவர்.
அந்தக் கல்வியகத்தில் பட்டம் பெறும் ஏழாவது குழுவைச் சேர்ந்த இந்த மாணவர்களுக்கான பட்டமளிப்பு விழா முதல் முறையாக இணையம் வழி நடத்தப்பட்டது.
10வது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் அந்தப் பள்ளியிலிருந்து இதுவரை 500 பேர் பட்டம் பெற்றுள்ளனர்.
சங்கத்தின் கல்வியகத்தில் 10 மாத பட்டயக் கல்வியில் சிறப்புத் தேர்ச்சி பெற்றுள்ள குமாரி ஆயிஷா, மாணவர்களுக்குப் பயிற்றுவிப்பதில் கட்டுக்கோப்பான முறையைப் பின்பற்றுவது பற்றி தாம் தெரிந்துகொண்டதாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் பத்திரிகையிடம் குறிப்பிட்டார்.