‘ரேசர்’ நிறுவனத்தின் பணப் பட்டுவாடா முறையின் கீழ் வரும் கிட்டத்தட்ட 100,000 வாடிக்கையாளர்களின் தனிப்பட்ட தகவல்களுடன் வாடிக்கையாளர்களுக்கு கப்பல் வழி அனுப்பப்படும் பொருட்கள் தொடர்பான தகவல் தொகுப்பு ஆகியவை பொதுமக்களுக்கு தெரியும் வகையில் ெவளியிடப்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது.
ஆனால், கடன் அட்டை எண்களும் மறைச் சொற்களும் பாதுகாப்பாக உள்ளன என்று அந்நிறுவனம் சென்ற வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கை குறிப்பிட்டது.
கணினி ‘சர்வ’ரை தவறாக வடிவமைத்ததால் இந்தப் பிரச்சினை எழுந்துள்ளதாக ‘ரேசர்’ மென்பொருள் நிறுவனம் தெரிவித்தது.இந்தப் பிரச்சினை அதற்கு இரண்டு நாட்கள் முன்னதாக, அதாவது சென்ற வாரம் புதன்கிழமையே, தீர்க்கப்பட்டுவிட்டதாகவும் அது கூறியது.
இதன்தொடர்பில் சிங்கப்பூர் தனி நபர் தரவு பாதுகாப்பு ஆணையத்திடம் வினவியபோது, இந்தப் பிரச்சினை பற்றி தான் அறிந்திருப்பதாகவும் இது குறித்த விசாரணை நடைபெற்று வருவதாகவும் அதன் பேச்சாளர் செவ்வாய்க்கிழமையன்று விளக்கினார்.
இந்தத் தகவல் கசிவு பிரச்சினை இணைய பாதுகாப்பு ஆலோசகர் விளாடிமிர் டைசென்கோ என்பவரால் கண்டுபிடிக்கப்பட்டது.
இவர் ‘லிங்ட்இன்’ இணையத்தளத்தில் கடந்த வியாழனன்று இது பற்றிக் கூறுகையில், மின்னஞ்சல் முகவரிகளின் எண்ணிக்கையைக் கொண்டு பார்க்கும்போது சுமார் 100,000 வாடிக்கையாளர்கள் பாதிக்கப்பட்டிருக்கக்கூடும் என்று மதிப்பிட்டுள்ளார். எனினும், இந்த எண்ணிக்கையை ‘ரேசர்’ உறுதி செய்யவில்லை.
பொதுமக்கள் பார்க்கும் வகையில் கணினி ‘சர்வர்’ ஆகஸ்ட் 18ஆம் தேதியே தவறாக வடிவமைக்கப்பட்டிருந்து. அத்துடன், இது தொடர்பாக அந்த நிறுவனத்துக்கு தான் உடனே தெரியப்படுத்தியாகவும் திரு விளாடிமிர் டைசென்கோ கூறினார்.
ஆனால், அவர் கூறிய தகவலை தொழில்நுட்பத் திறனற்ற மேலாளர்கள் மூன்று வாரங்களுக்கும் மேலாக கையாண்டதால் அதுவரை அது பொதுமக்கள் பார்வையில் இருந்ததாக அவர் விளக்கினார்.
இந்த காலகட்டத்தில் வாடிக்கையாளர்களின் முழுப் பெயர், மின்னஞ்சல் முகவரி, தொலைபேசி எண், வாடிக்கையாளர் அடையாள எண், கொள்முதல் ஆணை எண், அதன் தொடர்பான மற்ற தகவல்கள், பொருட்களின் கப்பல் வழி செல்லும் விவரம் போன்றவை பொதுமக்கள் அறியக்கூடியதாக இருந்ததெனக் கூறப்படுகிறது.
“கணினி தவறாக வடிவமைக்கப்பட்ட விவகாரம் செப்டம்பர் 9ஆம் தேதி சரிசெய்யப்பட்டுவிட்டது,’ என ‘ரேசர்’ நிறுவனம் கூறினுள்ளது.
இந்தத் தவற்றுக்கு அந்த நிறுவனம் மன்னிப்புக் கேட்டுக்கொண்டதுடன் தவற்றை சரிசெய்யத் தேவையான அனைத்து நடவடிக்கை
களையும் தான் மேற்கொண்டுள்ளதாகத் தெரிவித்தது.