குற்றவியல் நீதி அமைப்பில் நியாயம் தொடர்பான விவகாரம் பற்றி அடுத்த மாதம் கூடவுள்ள நாடாளுமன்றத்தில் பேச பாட்டாளிக் கட்சித் தலைவர் திருவாட்டி சில்வியா லிம் விண்ணப்பம் செய்துள்ளார்.
‘அனைவருக்கும் நீதி: குற்றவியல் நீதி அமைப்பில் சமத்துவத்தை மேம்படுத்துவது’ என்ற தலைப்பில் திருவாட்டி லிம் தாக்கல் செய்துள்ள ஒத்தி வைப்பு தீர்மானம், முன்னர் குற்றவாளி என்று தீர்ப்பளிக்கப்பட்ட திருவாட்டி பார்தியின் வழக்கு எழுப்பிய முக்கியத்துவம் வாய்ந்த விவகாரங்களைப் பேசும் என்று நேற்று அக்கட்சி வெளியிட்ட அறிக்கை கூறியது.
“குற்றவியல் நீதி அமைப்பின் அம்சங்களையும், அதை வழிநடத்துவதற்கு போதுமான வசதிகள் இல்லாதவர்கள் எதிர்கொள்ளும் சவால்களையும் விவாதிப்பதே இதன் நோக்கம். இந்த நீதி அமைப்பை மேம்படுத்துவதற்கான பரிந்துரைகள் செய்யப்படும்,” என்று ஃபேஸ்புக்கில் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சாங்கி விமான நிலையக் குழுமத்தின் முன்னாள் தலைவர் லியூ மன் லியோங் வீட்டில் திருடியதாக சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளிலிருந்து குமாரி பார்தி இம்மாதம் விடுவிக்கப்பட்டார். அந்த வழக்கு, விசாரணை பற்றிய கேள்வி எழுப்பியுள்ளதாகத தலைமை நீதிபதி உச்ச நீதிமன்றத் தீர்ப்பில் கூறியிருந்தார். அந்த வழக்கு தொடர்பில் மறுஆய்வு மேற்கொள்ளப்படுகிறது.