சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகமும் எஸ்டி எஞ்சினியரிங் நிறுவனமும் $9 மில்லியன் மதிப்பிலான ஆராய்ச்சித் திட்டத்திற்கான ஒத்துழைப்பில் ஈடுபட்டு உள்ளன.
சிங்கப்பூரிலும் உலகளவிலும் அறிவார்ந்த நகரங்களை உருவாக்குவதன் தொடர்பில் எழும் பிரச்சினைகளுக்கத் தீர்வு காணும் தொழில்நுட்பத்தை உருவாக்குவதற்கான இந்த ஆராய்ச்சி பல ஆண்டு காலம் நீடிக்கும்.
இரண்டு ஆராய்ச்சித் திட்டங்களுடன் நடவடிக்கைகள் தொடங்கும். நகரப் போக்குவரத்து நிர்வகிப்பு, நிறுவன மின்னிலக்கத்தளம் ஆகிய திட்டங்கள் அவை.
நகரப் போக்குவரத்து நிர்வகிப்பு என்பது தரவுகளையும் காணொளி பகுப்பாய்வுகளையும் பயன்படுத்தி போக்குவரத்து நெரிசலைக் குறைப்பது மீது கவனம் செலுத்தும்.
போக்குவரத்து நிலவர மதிப்பீடு, முன்னுரைப்பு ஆகிய தீர்வுகளின் வழி போக்குவரத்து நெருக்கடி பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான வழிவகைகளை ஆராய்ச்சியாளர்கள் கோருவர்.
தானியக்க வாகனத் தொழில்நுட்பம், 5ஜி உள்கட்டமைப்பு, இயந்திரத்திற்கு இயந்திரம் இடையிலான தொழில்நுட்பங்கள் போன்ற எதிர்கால அம்சங்களை இத்திட்டம் கொண்டிருக்கும்.
அடுத்த ஆய்வுத் திட்டமான நிறுவன மின்னிலக்கத் தளம் என்பது நீக்குப்போக்கான, அளவிடக்கூடிய செயற்கை நுண்ணறித்தளத்தைக் குறிக்கும்.
இணையப் பாதுகாப்பு, தரவு, வன்பொருள் போன்றவற்றில் நகரங்களுக்கும் வர்த்தகங்களுக்கும் உள்ள பல்வேறு தேவைகளை இந்த மின்னிலக்கத் தளம் ஒருங்கிணைக்கும்.