லாஸ் வேகாஸ் சேண்ட்ஸ் சிங்கப்பூர் சூதாட்ட நிறுவனம், சூதாட்டக்காரர்களின் US$1 பில்லியனுக்கும் அதிகமான பணத்தை மூன்றாம் தரப்புகளுக்கு ஊழியர் மாற்றிவிட்ட விவகாரம் பற்றி புதிதாக புலன்விசாரணை நடத்த சட்ட நிறுவனம் ஒன்றை அமர்த்தியுள்ளது.
இந்த விவகாரம் பற்றி தகவல் தெரிந்தவர்கள் இவ்வாறு கூறி இருப்பதாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் தெரிவித்துள்ளது. சச்சரவுகளுக்குத் தீர்வு காண்பதிலும் அனைத்துலக சமரசத் துறையிலும் கவனம் செலுத்தும் ‘தவிந்தர் சிங் சேம்பர்ஸ்’ என்ற சட்ட நிறுவனம், அந்தக் காரணத்துக்காக நியமிக்கப்பட்டு உள்ளதாக அந்தத் தரப்புகள் தெரிவித்துள்ளன.
மரினா பே சேண்ட்ஸில் மூன்றாம் தரப்பு பண மாற்றங்கள் தொடர்பில் சிங்கப்பூர் போலிஸ் புலன்விசாரணை தொடங்கியதை அடுத்து அந்த நியமனம் இடம்பெற்று இருக்கிறது.
அமெரிக்காவின் நீதித்துறையும் சிங்கப்பூர் அதிகாரிகளும் அந்த விவகாரம் பற்றி புலன்விசாரணை நடத்தி வருகிறார்கள். இதில் இப்போது சட்ட நிறுவனமும் சேர்ந்துகொண்டு இருக்கிறது.
சூதாட்டக்கூட புரவலர் ஒருவர், தனக்குத் தெரியாமல் தன்னுடைய $9.1 மில்லியனுக்கும் அதிக தொகை இதர சூதாட்டக்காரர்களுக்கு மாற்றிவிடப்பட்டு இருக்கிறது என்று சென்ற ஆண்டு மரினா பே சேண்ட்ஸ் மீது வழக்குத் தொடுத்தார். இந்த வழக்கு விவகாரம் நீதிமன்றத்துக்கு வெளியே ஜூன் மாதம் தீர்த்துக்கொள்ளப்பட்டது.
முழுப் பணத்தையும் திருப்பித் தந்துவிடுவதாக மரினா பே சேண்ட்ஸ் ஒப்புக்கொண்டது.
வாடிக்கையாளர்களின் பணம் மாற்றிவிடப்படுவதன் தொடர்பில் பிரச்சினைகள் எழுப்பப்பட்டபோது அந்த விவகாரம் பற்றி நிறுவனம் நூற்றுக்கு நூறு மறுபரிசீலனை செய்தது. வாடிக்கையாளரின் எண்ணத்துக்கு மாறாக எந்தவொரு வகையிலும் அவரின் பணம் மாற்றிவிடப்படவில்லை என்ற முடிவுக்கு இந்த நிறுவனம் வந்தது.
மரினா பே சேண்ட்ஸ் நிறுவனம் அதிகாரிகளுடன் அணுக்கமாக தொடர்ந்து செயலாற்றி இந்த நிறுவனம், சட்ட விதிமுறைகளை மீறாமல் நடப்பதைக் கண்காணித்து வரும் என்றும் அறிக்கையில் அது தெரிவித்துள்ளது.
இதனிடையே, புரவலர் ஒருவரின் கணக்கில் இருந்து அங்கீகாரம் இல்லாமல் மரினா பே சேண்ட்ஸ் நிறுவனம் பணத்தை மாற்றிவிட்டு இருக்கிறது என்று கூறப்பட்டதன் தொடர்பில் தான் நடத்திய புலன்விசாரணையை முடித்துக்கொண்டு இருப்பதாக சிங்கப்பூரின் சூதாட்ட ஒழுங்குமுறை ஆணையம் புளூம்பர்க் நியூஸ் செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தது.
மரினா பே சேண்ட்ஸ் நிபந்தனை கள் எதையும் மீறவில்லை என்றாலும் பணத்தை மாற்றிவிடுவதன் தொடர்பிலான அந்த நிறுவனத்தின் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளில் பலவீனங்கள் இருப்பதாக ஆணையம் அறிக்கை ஒன்றில் கூறியது.
இத்தகைய காரியங்களைக் கடுமையானதாக ஆணையம் கருதுகிறது. கட்டுப்பாட்டு நடவடிக்கைகளைப் பலப்படுத்துமாறு மரினா சேண்ட்ஸ்க்கு ஆணையம் உத்தரவிட்டது.
அந்த உத்தரவை மரினா சேண்ட்ஸ் அமல்படுத்தி இருக்கிறது என்றும் ஆணையம் குறிப்பிட்டது.