இந்த ஆண்டிற்கான கட்டுமானத் தேவை கணிப்பில் $10 பில்லியன் குறைக்கப்பட்டு இருக்கிறது. கொடுக்கப்பட்ட ஒப்பந்தங்கள், வரவிருக்கின்ற அரசாங்கம் மற்றும் தனியார் துறை திட்டங்கள் ஆகியவற்றைப் பரிசீலனை செய்தபிறகு கட்டட, கட்டுமான ஆணையம் அந்தக் கணிப்பைக் குறைத்து இருக்கிறது.
இந்த ஆண்டு கட்டுமானத் தேவை $28 பில்லியன் முதல் $33 பில்லியன் வரை இருக்கும் என்று கடந்த ஜனவரியில் கணிக்கப்பட்டது. அந்தக் கணிப்பு இப்போது $18 பில்லியனிலிருந்து $23 பில்லியன் வரை என்று குறைக்கப்பட்டு இருப்பதாக இந்த ஆணையம் நேற்று தெரிவித்தது. தனியார் துறை கட்டுமானத் தேவை குறைந்ததே இதற்குக் காரணம் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
கொவிட்-19 காரணமாக ஏற்பட்டு வரும் பாதிப்புகளை மதிப்பிடுவதற்கு மேலும் கால அவகாசம் தேவை என்று ஒப்பந்தக்காரர்களும் பொருள் விநியோகிப்பாளர்களும் கேட்டு இருப்பதால் சில அரசாங்கத் துறை திட்டங்கள் அடுத்த ஆண்டுக்கு ஒத்திபோடப்பட்டு இருக்கின்றன.
இந்த ஆண்டிற்கான அரசாங்கத் துறை ஒப்பந்தங்களின் கணிப்பு $11 பில்லியன் முதல் $14 பில்லியன் வரை இருக்கும் என்றும் தனியார் துறையைப் பொறுத்தவரையில் இது $7 பில்லியன் முதல் $9 பில்லியன் வரை இருக்கும் என்றும் கணக்கிடப்பட்டு இருக்கிறது.
இருந்தாலும் கட்டுமான தேவைகள் 2021 முதல் ஓரளவுக்கு மீட்சி காணுமென எதிர்பார்க்கப்படுகிறது.
கொவிட்-19 காரணமாக கட்டுமானத் துறை முடங்கிப்போனது. அந்தத் துறை படிப்படியாக மீண்டு வருகிறது. இந்நிலையில், கொவிட்-19 கிருமி மறுபடியும் தலைதூக்காதவாறு விழிப்புடன் இருந்து இந்தத் துறை பார்த்துக்கொள்ளவேண்டும் என்று ஆணையம் சட்டிக்காட்டி உள்ளது.
2021-2022க்கான கட்டுமானத் தேவை கணிப்பு பற்றிய புதிய தகவல்களை அடுத்த ஆண்டு தொடக்கத்தில் இந்த ஆணையம் வெளியிடும்.
இதனிடையே, கட்டுமானத் தொழில்துறை நிலையான தொழில் மேம்பாட்டிற்கான ஆற்றலை பலப்படுத்திக்கொள்ள வேண்டிய தேவை இருக்கிறது என்பதை உணர்ந்துகொண்டு இருப்பதாக ஃபேஸ்புக் பக்கத்தில் தேசிய வளர்ச்சி அமைச்சர் டெஸ்மண்ட் லீ நேற்று தெரிவித்தார்.
இந்தத் தொழில்துறை மீண்டும் தலைதூக்கத் தொடங்கி இருக்கிறது என்றாலும் இது இன்னமும் பல சவால்களை எதிர்நோக்கி உள்ளது என்று அவர் கூறினார்.
அடுத்த ஆண்டு முதல் ஓரளவுக்குத் தேவை அதிகரிக்கும். பொதுத் துறை திட்டங்கள் அடுத்த ஆண்டு அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.