முகக்கவசம் அணியாமல் பேருந்தில் ஏறி பேருந்து ஓட்டுநரைத் தாக்கியதாக ஜஃபாலி அப்துல் ரஹிம் என்ற 52 வயது ஆடவர் மீது நேற்று குற்றம் சுமத்தப்பட்டது.
லோ கோக் வெங் என்ற பேருந்து ஓட்டுநரை முகத்தில் பிடித்துத் தள்ளி அதன் மூலம் அவருக்கு வேண்டுமென்றே காயம் விளைவித்ததாகக் கூறும் ஒரு குற்றச்சாட்டை அவர் எதிர்நோக்குகிறார்.
இந்தச் சம்பவம் பாசிர் ரிஸ் டிரைவ் 1ல் செவ்வாய்க்கிழமை நிகழ்ந்தது. அப்போது அந்த ஆடவரிடம் 6 செ.மீ. நீள கத்தி ஒன்று இருந்ததாகக் கூறும் ஒரு குற்றச்சாட்டையும் அவர் எதிர்நோக்குகிறார்.
பேருந்தில் நிகழ்ந்த சம்பவம் பற்றிய விவரங்களை எஸ்பிஎஸ் நிறுவனம் புதன்கிழமை ஃபேஸ்புக்கில் தெரிவித்தது. பாசிர் ரிஸ் டிரைவ் 6ல் செவ்வாய்க்கிழமை பிற்பகல் சுமார் 2.45 மணிக்குச் சேவை எண் 21ல் முகக்கவசம் அணியாமல் அந்த ஆடவர் ஏறினார்.
பிறகு அவர் முகக்கவசத்தை அணிந்துகொண்டார். இரண்டு பேருந்து நிறுத்தத் தொலைவு வரை பேருந்து ஓட்டுநரை நோக்கி கெட்ட வார்த்தைகளால் அவர் திட்டிக்கொண்டே வந்தார். போலிஸ் வருவதற்காக பேருந்தை பாசிர் ரிஸ் டிரைவ் 1ல் இருக்கும் 210 புளோக்குக்கு எதிரே ஓட்டுநர் நிறுத்தியபோது ஜஃபாலி அப்துல் ரஹிம் ஓட்டுநரைத் தாக்கினார். பேருந்து நிறுத்தத்தில் இருந்த மூன்று ஆடவர்கள் பேருந்தில் ஏறி அப்துல் ரஹிமை கீழே இழுத்துவந்தனர்.
பிறகு போலிஸ் வந்தது. பேருந்து ஓட்டுநர் சுய நினைவுடன் மருத்துவமனைக்குக் ெகாண்டு செல்லப்பட்டார். ஜஃபாலி அப்துல் ரஹிமுக்கு $15,000 பிணை அனுமதிக்கப்பட்டுள்ளது. அவர் அக்டோபர் 8 ஆம் தேதி மீண்டும் நீதிமன்றத்தில் முன்னிலையாவார்.