பொதுப் போக்குவரத்து பேருந்துகளில் பணிபுரியும் முன்கள ஊழியர்கள் தாக்கப்படும் சம்பவங்கள் அண்மையில் அதிகரித்துள்ளன.
இதைக் கருத்தில் கொண்டு, அவர்கள் விரும்பினால் தவறு செய்வோருக்கு எதிராக சிவில் வழக்குத் தொடுக்க ஏதுவாக அத்தகைய ஊழியர்களுக்கு எஸ்பிஎஸ் டிரான்சிட் உதவும்.
சட்டபூர்வ பிரதிநிதிகளை நியமிப்பது, அவர்களுக்கு ஆகும் செலவை ஏற்பது போன்ற உதவிகள் அவற்றில் அடங்கும். தன் ஊழியர்களுக்கு எதிரான எத்தகைய சட்டவிரோதச் செயலையும் தான் சகித்துக் கொள்ளப்போவ தில்லை என்று இந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.
குற்றவியல் நீதி முறைக்கு அப்பாலும் சிவில் வழக்குகளைத் தொடுத்து ஊழியர்கள் தங்களின் உரிமைகளைப் பாதுகாத்துக் கொள்ள முற்றிலும் நிர்வாகம் உதவும் என்று எஸ்பிஎஸ் டிரான்சிட் தெரிவித்துள்ளது.
இந்நிறுவனத்தின் முன்கள ஊழியர்கள் தாக்கப்படும் சம்பவங்கள் அண்மையில் அதிகமாகி உள்ளன. குறிப்பாக முகக்கவசம் கட்டாயமாகி உள்ள இந்தக் காலகட்டத்தில் ஊழியர்களுக்கு எதிரான வன்செயல் கூடி இருப்பதாக நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
கடந்த செவ்வாய்க்கிழமை முகக்கவசம் அணியாமல் பேருந்தில் ஏறிய ஒருவர் பேருந்து ஓட்டுநர் ஒருவரைத் தாக்கினார்.
முகக்கவசத்தை அணியும்படி கூறிய பேருந்து ஓட்டுநர்கள் தாக்கப்பட்ட சம்பவங்கள் கடந்த ஆகஸ்ட் மாதத்திலும் நிகழ்ந்தன.
இதனிடையே, இத்தகைய தாக்குதல்களைக் கண்டித்த எஸ்பிஎஸ் டிரான்சிட் இடைக்கால தலைமை நிர்வாகி செங் சியாக் கியான், இவை தடுக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தினார்.
“எங்கள் ஊழியர்கள் அன்றாடம் வேலைக்குச் சென்று விதிமுறைகளை நடைமுறைப்படுத்தும் பணிகளை உறுதியாகச் செய்கிறார்கள்.
“சரியான கட்டணத்தை செலுத்தும்படி, முகக்கவசத்தை அணியும்படி பயணிகளிடம் அவர்கள் சொல்லும்போது அதைச் செய்யாமல் ஊழியர்களைத் திட்டுவது, பெயரைச் சொல்லி கத்துவது, தாக்குவது போன்றவை எல்லாம் தவறான செய்கைகள்,” என்று திரு செங் குறிப்பிட்டார்.