சிங்கப்பூரில் உள்ள சுற்றுலாத் தளங்கள் இனி ஒரே நேரத்தில் கூடுதலான வருகையாளர்களை அனுமதிக்க முடியும். ஒரே நேரத்தில் 25 விழுக்காடு வருகையாளர்களை மட்டும் அனுமதிக்க முடியும் என்ற கட்டுப்பாடுகள் இரண்டு மாதங்களுக்கு மேலாக நடப்பில் இருந்தன.
ஆனால், வருகையாளர்களை அனுமதிக்கும் எண்ணிக்கையை 50 விழுக்காடாக அதிகரிக்க சிங்கப்பூர் பயணத்துறைக் கழகத்திடம் இன்று முதல் சுற்றுலாத் தளங்கள் விண்ணப்பிக்கலாம்.
மேலும், வெளிப்புறக் காட்சிகளில் 250 பேர் வரை அனுமதிக்கவும் அவை விண்ணப்பிக்க முடியும். தற்போது அந்த எண்ணிக்கை 50ஆக உள்ளது. என்றாலும், வெளிப்புறக் காட்சிகள் ஐந்து பகுதிகளாக பிரிக்கப்பட வேண்டும். ஒவ்வொரு பகுதியிலும் அதிகபட்சம் 50 பேர் மட்டுமே அனுமதிக்கப்படுவர். வெவ்வேறு பகுதிகளுக்கு இடையே பாதுகாப்பான இடைவெளி இருப்பதைச் சுற்றுலாத் தளங்கள் உறுதி செய்ய வேண்டும். இங்குள்ள சுற்றுலாத் தளங்கள் கூட்ட நெரிசலைச் சிறந்த முறையில் கட்டுப்படுத்தி வருவதைத் தொடர்ந்து கட்டுப்பாடுகள் தளர்த்தப்படுவதாக சிங்கப்பூர் பயணத்துறைக் கழகம் நேற்று முன்தினம் தெரிவித்தது.
உயர்தர சுகாதாரத்தை அவை பேணி வருவதையும் கழகம் சுட்டியது. வருகையாளர் எண்ணிக்கையைக் கண்காணித்து அதைக் கட்டுப்படுத்த இங்குள்ள அனைத்து சுற்றுலாத் தளங்களும் இணையப் பதிவு முறையை அறிமுகப்படுத்தியுள்ளதாகவும் கழகம் குறிப்பிட்டது.
அதிகரிக்கவுள்ள வருகையாளர் எண்ணிக்கைக்குத் தங்களைத் தயார்ப்படுத்தி வரும் சுற்றுலாத் தளங்களில் கரையோரப் பூந்தோட்டங்களும் ஒன்று.
உள்ளூர் சுற்றுலாத் தளங்களில் செலவிட 18 வயது அல்லது அதற்கு மேற்பட்ட வயதுடைய சிங்கப்பூரர்கள் ஒவ்வொருவருக்கும் $100 மதிப்புடைய பயணத்துறை பற்றுச்சீட்டுகள் வரும் டிசம்பர் மாதம் வழங்கப்படும்.