சிங்கப்பூரில் உள்ள சில தாதிமை இல்லங்களில் வசிப்பவர்கள் கூடிய விரைவில் காயங்களுக்குச் சிகிச்சை பெற முடியும். செயின்ட் லூக்ஸ் மருத்துவமனை மேற்கொண்டுள்ள புதிய திட்டத்தின் மூலம் இது சாத்தியமாகிறது.
லியூ அறநிறுவனத்திடமிருந்து தனக்கு $1.5 மில்லியன் நிதியுதவி வழங்கப்பட்டிருப்பதாக செயின்ட் லூக்ஸ் மருத்துவமனை நேற்று அறிவித்தது.
அடுத்த மூன்று ஆண்டு காலகட்டத்தில் இந்த நிதியுதவி விநியோகிக்கப்படும். காயங்களுக்குச் சிகிச்சை அளிக்கும் நிபுணத்துவ திறனைச் சமூகத்திற்கு நீட்டிக்க இந்த நிதியுதவி பயன்படுத்தப்படும்.
சிங்கப்பூரில் ஆண்டுதோறும் சுமார் 150,000 நோயாளிகள் நாட்பட்ட புண், காயங்களால் அவதியுறுகின்றனர்.
முதிர்ந்த வயது, சீரற்ற ரத்த ஓட்டம், நீரிழிவு உள்ளிட்ட நாட்பட்ட நோய்கள் போன்ற பல காரணங்களால் புண் ஆறுவதற்கு நாள் ஆவதாக செயின்ட் லூக்ஸ் மருத்துவமனையின் தலைமை நிர்வாகியான இணைப் பேராசிரியர் டான் பூன் யாவ் கூறினார்.
புக்கிட் பாத்தோக்கில் அமைந்துள்ள செயின்ட் லூக்ஸ் சமூக மருத்துவமனை, வயது முதிர்ந்த நோயாளிகளின் தேவையைப் பூர்த்தி செய்கிறது.
கடந்த சில ஆண்டுகளாக புண் காயங்களுக்குச் சிகிச்சை வழங்குவதில் தனது ஆற்றலை அந்த மருத்துவமனை மேம்படுத்தியுள்ளது. புண், காயங்கள் தொடர்பில் 13 மாநாடுகளையும் அது நடத்தி உள்ளது.
தனக்கு புதிதாக வழங்கப்பட்டு உள்ள இந்த நிதியுதவி மூலம் சுமார் 20 தாதிமை இல்லங்களில் உள்ள தாதியர்க்கு புண் பராமரிப்பு உத்திகளைச் சொல்லித் தர செயின்ட் லூக்ஸ் மருத்துவமனை நோக்கம் கொண்டுள்ளது.
நாட்பட்ட புண் காயங்களால் அவதியுறும் நோயாளிகளை மற்ற மருத்துவமனைகளுக்கு மாற்றாமல் தாதிமை இல்லங்களிலேயே தங்க வைத்து சிகிச்சை அளிக்க தாதியர்க்கு இந்தப் பயற்சி கைகொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
எடுத்துக்காட்டாக, தாமான் ஜூரோங் பகுதியில் உள்ள செயின்ட் ஆன்ட்ரூஸ் தாதிமை இல்லத்தில் பணிபுரியும் தாதியர்க்கு செயின்ட் லூக்ஸ் மருத்துவமனை ஊழியர்கள் வேலைப் பயிற்சி வழங்கி வருகின்றனர்.
கேலாங் ஈஸ்ட், சாய் சீ ஆகிய இடங்களில் இயங்கும் என்டியுசி ஹெல்த் தாதிமை இல்லங்களில் பணியாற்றும் ஊழியர்களுக்கு விரைவில் இத்தகைய பயற்சி அளிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதிதாக வழங்கப்பட்டுள்ள இந்த நிதியுதவி மூலம் புண் காயங்களுக்குச் சிகிச்சை அளிப்பதில் புதிய மருந்துகளையும் உத்திகளையும் செயின்ட் லூக்ஸ் மருத்துவமனை பரிசோதித்துப் பார்க்கும்.
இதனால் மருத்துவமனைகளுக்குச் செல்லாமல் தாதிமை இல்லங்களில் இருந்தவாறே நோயாளிகள் சிகிச்சை பெற வழிவகை ஏற்படுத்தித் தரலாம்.