அப்துல் மாலிக் முகம்மது கஸாலி என்ற பெயரில் சமய, இன உணர்வுகளைத் தூண்டும் நோக்கத்துடன் சமூக ஊடகத்தில் கருத்துகளைப் பதிவிட்டதற்காகவும் தொல்லை விளைவித்ததற்காகவும் ஆடவர் ஒருவருக்கு போலிசார் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இந்தப் பதிவுகளை அவர் கடந்த ஜூலை மாதம் 5ஆம் தேதியிலும் பிப்ரவரி 8ஆம் தேதியிலும் சமூக ஊடகத்தில் பதிவேற்றம் செய்தார்.
ஜூலை மாதம் 5ஆம் தேதியன்று அந்த ஆடவரின் பதிவுகள் மிரட்டல் விடுக்கும் வகையில் அமைந்திருந்ததாகவும் பிப்ரவரி மாதம் 8ஆம் தேதி பதிவேற்றம் செய்த கருத்துகள் சமயம் மற்றும் இன ரீதியாகப் பிளவு ஏற்படுத்தும் விதமாக அமைந்திருந்ததாகவும் போலிசார் தெரிவித்தனர்.
செங்காங் குழுத் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் ரயீசா கானின் பதிவுகளை மேற்கோள் காட்டி அந்த ஆடவர் கருத்து தெரிவித்தார். திருவாட்டி ரயீசா கானின் தந்தையைப் பற்றி அவர் மரியாதை குறைவாகக் கருத்து தெரிவித்து மிரட்டும் வகையில் பதிவிட்டிருந்தார்.
இந்நிலையில், வெண்டி செங் எனும் இணையவாசிக்கு எதிராக மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கப்படாது என்று போலிசார் நேற்று தெரிவித்தனர்.
திருவாட்டி சுவா பதிவிட்ட கருத்துகள் பற்றி போலிசார் தகவல் தெரிவிக்க மறுத்துவிட்டனர். ஆனால், அவை கடந்த ஜூலை மாதம் 5ஆம், 6ஆம் தேதிகளில் திருவாட்டி ரயீசா கானுக்கு எதிராக அவர் பதிவிட்ட கருத்துகளுடன் தொடர்புடையவை என நம்பப்படுகிறது.
சிங்கப்பூரில் பணிபுரியும் வெளிநாட்டு ஊழியர்களைக் குறிவைத்து இனவாதக் கருத்துகளை டுவிட்டரில் பதிவு செய்ததற்கு திருவாட்டி செங்கிற்கு எதிராக இவ்வாண்டு போலிசில் புகார் செய்யப்பட்டது.