மின்னிலக்க ரீதியாக தனித்தனியாகச் செயல்படுவது அல்லது ஒருங்கிணைந்து செயல்படுவது குறித்து உலகம் முடிவெடுக்கும் கட்டத்தில் உள்ளது என்று வர்த்தக, தொழில் அமைச்சர் சான் சுன் சிங் நேற்று முன்தினம் தெரிவித்தார்.
இது தொடர்பாக எடுக்கப்படும் முடிவு உலகளாவிய பொருளியலின் நிலையை நிர்ணயிக்கும் என்றார் அவர். பொருளியல், தொழில்நுட்பம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட வேண்டும் என்றும் குறிப்பிட்ட திரு சான், அரசியல் நோக்கத்துடன் எடுக்கப்படக்கூடாது எனக் கூறினார்.
பீட்டர்சன் அனைத்துலகப் பொருளியல் கழகத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட மெய்நிகர் கலந்துரையாடலில் திரு சான் பேசினார்.
உலகளாவிய மின்னிலக்க ஒருங்கிணைப்புக்கு தலைமை தாங்க அமெரிக்காவுக்கு வரலாற்று சிறப்புமிக்க வாய்ப்பு கிடைத்திருப்பதாக அவர் தெரிவித்தார். ஆனால் புதிய முறையை வடிவமைக்க அமெரிக்காவுக்கு ஒரே நோக்கம் கொண்ட பங்காளிகள் தேவை என்றார் அமைச்சர் சான். இதில் அமெரிக்கா சிறப்பாகச் செயல்பட்டால் அடுத்த ஒரு தலைமுறைக்கு உலகளாவிய நிலையில் அமெரிக்காவின் தலைமைத்துவம் உறுதி செய்யப்படும் என்றார் அவர்.
மின்னிலக்க ஒருங்கிணைப்பின் முக்கியத்துவத்தை கொவிட்-19 நெருக்கடிநிலை வலியுறுத்தியிருப்பதாக திரு சான் கூறினார். மின்னிலக்கப் பொருளியல் நடை
முறைப்படுத்தப்படுவதை அது விரைவுபடுத்தியுள்ளதாக அவர் தெரிவித்தார்.
“மின்னிலக்கமயமாதல் வர்த்தக முறையை மாற்றி அமைத்துள்ளது. இது உலகளாவிய வரத்தகத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும்,” என்றார் அமைச்சர் சான்.
மாற்றத்தின்போது எதிர்நோக்கக்கூடிய சவால்களை அவர் முன்வைத்தார். மின்னிலக்க வர்த்தகங்களுக்கு நாடுகள் இடையூறு விளைவிப்பது, ஊழியர்களுக்கு மின்னியல் பயிற்சி வழங்க சிரமப்படுவது போன்ற சவால்கள் ஏற்
படக்கூடும் என்றார் அவர்.
பெரிய தொழில்நுட்ப நிறுவனங்களின் வலிமையையும் செல்வாக்கையும் குறைத்து மதிப்பிடக்கூடாது என்று தெரிவித்த திரு சான், புதிய மின்னிலக்க முறையை நிறுவ அவற்றுக்குப் பங்கு இருப்பதாகக் கூறினார்.