சிங்கப்பூர், தாய்லாந்து ஆகிய நாடுகளிலிருந்து வருவோரை தனிமைப்படுத்தி வைக்கும் பட்டியலிலிருந்து இங்கிலாந்து நீக்கியுள்ளது.
அதன்படி, இன்று அதிகாலை 4.00 மணியிலிருந்து இங்கிலாந்து சென்று சேரும் சிங்கப்பூர், தாய்லாந்து பயணிகள் தங்களை தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டியதில்லை என்று பிரிட்டிஷ் போக்குவரத்து அமைச்சர் கிராண்ட் ஷாப்ஸ் வியாழக்கிழமையன்று அறிவித்தார்.
இதற்கு அவர்கள் இங்கிலாந்துக்கு வருவதற்கு முன்பாக 14 நாட்களுக்கு இந்த சலுகையைப் பெற்றிராத, தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டிய நாடுகளுக்கு அவர்கள் சென்றிருக்கக்கூடாது என்றும் பிரிட்டனின் அரசு இணையத்தளம் தெரிவித்துள்ளது.
சிங்கப்பூர், தாய்லாந்து ஆகிய நாடுகள் பிரிட்டனின் பயண சாளர பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளன. இதனால், இவ்விரு நாடுகளிலிருந்தும் செல்லும் பயணிகளுக்கு தனிமையில் இருக்க வேண்டிய கட்டாயம் இல்லை.
ஆனால், சிங்கப்பூர், தாய்லாந்திலிருந்து வருபவர்கள் தங்களை தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டியதில்லை என்றாலும் இவ்விரு நாடுகளுக்கும் பிரிட்டனிலிருந்து செல்லும் பயணிகளின் எண்ணிக்கை பெருமளவில் உயர வாய்ப்பில்லை என்று பிபிசி செய்தித் தகவல் கூறுகிறது.