அடுத்த மாதம் எல்லா ஞாயிற்றுக்கிழமைகளிலும் புக்கிட் பாஞ்சாங் எல்ஆர்டி கட்டமைப்பு மூடப்படும் என்று அதனை நிர்வகிக்கும் எஸ்எம்ஆர்டி நிறுவனம் தெரிவித்து உள்ளது. தனது புதிய சமிக்ஞை முறையைச் சோதித்துப் பார்க்கும் பணிகளுக்காக இலகு ரயில்கள் நிறுத்தி வைக்கப்படுவதாக அது குறிப்பிட்டது. 13 நிலையங்களை உள்ளடக்கிய புக்கிட் பாஞ்சாங் இலகு ரயில் தடம் அக்டோபர் 4 முதல் அக்டோபர் 25 வரை நான்கு ஞாயிற்றுக்கிழமைகளில் மூடப்படும்.
புக்கிட் பாஞ்சாங் எல்ஆர்டி போக்குவரத்து முறை நாள்பட்டதாகிவிட்டதால் அதனை ஒட்டுமொத்தமாகப் புதுப்பிக்கும் பொருட்டு அதனை ஒரு பகுதியாக சோதனைப் பணிகளை 2018ஆம் ஆண்டு நிலப் போக்குவரத்து ஆணையம் அறிவித்தது.
பொம்பார்டியர் (சிங்கப்பூர்) என்னும் நிறுவனத்துக்கும் $344 மில்லியன் பெறுமான புதுப்பிப்புக் குத்தகை வழங்கப்பட்டது. 19 இலகு ரயில் வாகனங்களை புதியனவாக மாற்றுவதும் அதில் அடங்கும். 2024ஆம் ஆண்டுவாக்கில் புதுப்பிப்புப் பணிகள் நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.