பொதுத் தேர்தல் நடைபெற்ற காலகட்டத்தில் பணம் பெற்றுக்கொண்டு சட்டவிரோத விளம்பரங்களை வெளியிட்டதற்காக ‘நியூ நாரட்டிஃப்’ என்னும் சமூக-பொருளியல் இணையத்தளத்திற்கு எதிராக உதவி தேர்தல் அதிகாரி போலிசில் புகார் தெரிவித்துள்ளார். தேர்தல் துறை நேற்று இதனை அறிக்கை மூலம் தெரிவித்தது. அந்த விளம்பரங்கள் நாடாளுமன்றத் தேர்தல் சட்டத்தின்கீழ் நடத்தை விதிகளை மீறிய செயல் என்றும் அதில் குறிப்பிடப்பட்டு உள்ளது. புகார் தெரிவிக்கப்பட்டதை உறுதி செய்த போலிஸ் அது தொடர்பான விசாரணை நடைபெற்று வருவதாகத் தெரிவித்தது.
‘நியூ நாரட்டிஃப்’ பக்கத்தில் வெளியிடப்பட்ட ஐந்து விளம்பரங்களை அகற்றுமாறு ஜூலை 3, ஜூலை 7 மற்றும் ஜூலை 8 ஆகிய தேதிகளில் ‘ஃபேஸ்புக்’ சமூக ஊடகத்தை உதவி தேர்தல் அதிகாரி கேட்டுக் கொண்டிருந்தார். அவை பணம் பெற்றுக்கொண்டு வெளியிடப்பட்ட, அனுமதி வழங்கப்படாத விளம்பரங்கள் என்று தேர்தல் துறை கூறியது. பொதுத் தேர்தல் 2020க்கான பிரசாரம் நடைபெற்றுக்கொண்டு இருந்தது.
நாடாளுமன்றத் தேர்தல் சட்டப்படி எந்தவொரு தேர்தல் நடத்தைக்கும் வேட்பாளரோ அல்லது அவரது முகவரோ எழுத்து மூலம் அனுமதி அளித்திருக்க வேண்டும்.
“தேர்தல் நடத்தைகளில் ஈடுபட ‘‘நியூ நாரட்டிஃப்’ இணையத்தளத்திற்கோ அதன் பிரதிநிதிக்கோ அல்லது அதன் முகவருக்கோ வேட்பாளர் அல்லது அவரது முகவர் இத்தேர்தலின்போது அனுமதி எதனையும் வழங்கவில்லை,” என்றும் தேர்தல் துறை தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.