பொங்கோல் 21 சமூக மன்றத்துக்கு வெளியே வண்ணமயமான கப்பல் கொள்கலன் ஒன்று வைக்கப்பட்டுஉள்ளது.
வேலை தேடி வருவோருக்கு வேலை வாய்ப்புகளைத் தேடித் தரும் மற்றும் வேலை தொடர்பான ஆலோசனை வழங்கும் நிலையமாக அது செயல்படுகிறது.
‘ஜாப் கொண்டேனர்’ என்று அழைக்கப்படும் அந்த நிலையத்தை பாசிர் ரிஸ்-பொங்கோல் குழுத் தொகுதி மற்றும் பொங்கோல் வெஸ்ட் தனித்தொகுதி ஆகியவற்றின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் நேற்று அதிகாரபூர்வமாகத் திறந்து வைத்தனர்.
வார இறுதிகளில் திறந்திருக்கும் அந்த நிலையத்தில் சிங்கப்பூர் ஊழியரணி அமைப்பு, ‘ஸ்கில்ஸ் சென்டர் வித் புரோஜெக்ட் சக்சஸ்’ அமைப்பு ஆகியவற்றின் சேவைகள் ஒருங்கிணைக்கப்பட்டிருக்கும்.
குடியிருப்பாளர்கள் வேலை தொடர்பான தங்கள் விருப்பங்கள் பற்றி மனம் விட்டுப் பேச, ‘ஜாப் கொண்டேனர்’ நிலையம் ஓர் உகந்த இடம் என்றார் பொங்கோல் ஷோர் வட்டாரத்தை மேற்பார்வையிடும் நாடாளுமன்ற உறுப்பினர் திருவாட்டி இயோ வான் லிங்.
“வேலையின்மையும் ஆட்குறைப்பும் பேசுவதற்கு மிகவும் சர்ச்சையான விவகாரங்கள். இதன் காரணமாகத்தான் மக்கள் மனந்திறந்து பேசுவதற்கு ஒரு சிறந்த இடத்தை அமைத்துக் கொடுப்பது முக்கியம் எனக் கருதினோம்,” என்றார் திருவாட்டி இயோ.
பொங்கோல் ஷோர் வட்டாரத்தில் அமைந்துள்ள சமூக மன்றத்தில் நடைபெறும் வேலைச் சந்தையில் செய்தியாளர்களிடம் பேசினார் திருவாட்டி இயோ.
இந்த ஒரு நாள் வேலைச் சந்தையில், சுகாதாரப் பராமரிப்பு, உணவு, பானம் ஆகிய துறைகளில் உள்ள கிட்டத்தட்ட 1,000 வேலைகள் வழங்கப்பட்டன.
“கொவிட்-19 நிலவரத்தால் பெரிதும் பாதிக்கப்பட்ட விமானத்துறையிலும் இதர தொழில்துறைகளிலும் குடியிருப்பாளர்கள் பலர் வேலை செய்கிறார்கள். ஆகவே, இதுபோன்ற வேலைச் சந்தைகள் குடியிருப்பாளர்களை இன்னும் நெருக்கமாகக் கொண்டு வருவதுடன் குடியிருப்பாளர்களுக்கு நாம் உதவவும் வாய்ப்பளிக்கிறது,” என்றார் பாசிர் ரிஸ் ஈஸ்ட் வட்டாரத்துக்குப் பொறுப்பு வகிக்கும் நாடாளுமன்ற உறுப்பினர் ஷாரியல் தாஹா.
திருவாட்டி இயோ, திரு ஷாரியல் தாஹா இருவருடன் சேர்ந்து மூத்த அமைச்சர் டியோ சீ ஹியன், உள்துறை மற்றும் நீடித்த நிலைத்தன்மை, சுற்றுப்புற துணை அமைச்சர் டெஸ்மண்ட் டான், கல்வி மற்றும் சமுதாய, குடும்ப மேம்பாட்டு துணை அமைச்சர் சுன் சூலிங் ஆகியோர் இணைந்து புதிய ‘ஜாப் கொண்டேனர்’ வேலை ஆலோசனை நிலையத்தைத் திறந்து வைத்தனர்.
வரும் நவம்பர் மாதத்தில், திருவாட்டி இயோவின் பொங்கோல் ஷோர் வட்டாரம், தன்னுரிமை பணியாளர்களுக்கு PS Lvbang எனும் வழிகாட்டி தளத்தை தொடங்கவிருக்கிறது.
அதன் மூலம் தன்னுரிமை தொழிலாளர்கள் தங்கள் சேவைகளைக் குடியிருப்பாளர்களிடம் விளம்பரப்படுத்தலாம். அது தொடர்பான மேல் விவரங்கள் அடுத்த மாதம் வெளியிடப்படும்.
சுகாதாரப் பராமரிப்புத் துறைக்கு பணியிடை மாற்றம் செய்ய விரும்பும் ஒன் பொங்கோல் குடியிருப்பாளரான 45 வயது திருவாட்டி ஆங் அய் லியான், ஓராண்டுக்கு முன் தாம் பார்த்த கணக்கியல் வேலையிலிருந்து ஓய்வு எடுக்க நினைத்தார். அதன் பிறகு அவர் சிங்கப்பூர் எக்ஸ்போ அரங்கில் கொவிட்-19 நோயாளிகளுக்கு உதவும் செயல்பாட்டு ஆதரவு உதவியாளராக தொண்டூழியம் புரிந்தார்.
“அந்த வேலையில் நான் மிகுந்த திருப்தியடைந்ததை பிறகு உணர்ந்தேன். முதலில், ஒரு வேலையைச் செய்ய உங்கள் மனம் விரும்பும். ஆனால் அதில் உங்களுக்கு அனுபவம் இல்லை என்பதால், அதை செய்ய நீங்கள் தயங்குவீர்கள்.
“ஆனால் இப்போது, அது எனக்குப் பிடித்த வேலையாகி விட்டது. அதனால்தான் நான் இங்கு வந்திருக்கிறேன்,” என்றும் கூறினார் திருவாட்டி ஆங்.