ஊதியத்தைவிட வேலையில் நீடிப்பதே முக்கியம் எனக் கருதி, தங்களது ஊதியத்தை 50% வரை குறைத்துக்கொள்ள சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் (எஸ்ஐஏ) விமானிகள் ஒப்புக்கொண்டுள்ளனர்.
அவர்களது ஊதியத்தின் ‘எம்விசி’ விகிதத்தில் ஏற்கெனவே 10% குறைக்கப்பட்டுள்ளதாக அறியப்படுகிறது என்று ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் செய்தி கூறியது.
எஸ்ஐஏ நிறுவனத்திற்கும் சிங்கப்பூர் விமானிகள் சங்கத்திற்கும் (ஆல்ஃபா-எஸ்) இடையே எட்டப்பட்டுள்ள புதிய உடன்பாட்டின்படி, மீண்டும் பணியில் அமர்த்தப்பட்ட விமானிகளின் ஊதியத்தில் 60 விழுக்காடும் ‘ஃபர்ஸ்ட் ஆஃபிசர்’ எனும் முதல்நிலை விமானிகளின் ஊதியத்தில் 50 விழுக்காடும் குறைக்கப்படும். இதில் 10% ‘எம்விசி’ குறைப்பும் உள்ளடங்கும்.
இந்த ஊதியக் குறைப்பு அடுத்த மாதம் 1ஆம் தேதியில் இருந்து 2022ஆம் ஆண்டு மார்ச் 31ஆம் தேதி வரை நடைமுறையில் இருக்கும் என்று விமானிகளுக்கு அனுப்பப்பட்ட உள்சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மற்ற விமானிகளுக்கு 28.5% வரையும் முதல்நிலை விமானிகளுக்கு 18.5% வரையும் ஊதியக் குறைப்பு இருக்கும் என்றும் அவ்விகிதம் அவர்களின் தற்போதைய ஊதியத்தின் அடிப்படையில் இருக்கும் என்றும் சொல்லப்படுகிறது.
வானில் பறக்கும் நேரம் அதிகரிக்கும் பட்சத்தில் விமானிகளின் ஊதியக் குறைப்பு மறுஆய்வு செய்யப்பட்டு, சரிக்கட்டப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இத்தகையதோர் உடன்பாடு எட்டப்பட்டதை எஸ்ஐஏ நிறுவனப் பேச்சாளரும் உறுதிசெய்தார்.
“இன்றைய (நேற்றைய) உடன்பாட்டின்படி, எஞ்சியுள்ள அனைத்து சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் மற்றும் சில்க்ஏர் விமானிகளுக்கும் வரும் அக்டோபர் 1ஆம் தேதியில் இருந்து ஊதியக் குறைப்பு நடவடிக்கை அமல்படுத்தப்படும். எங்களின் விமானிகள் மேலும் வேலையிழக்காமல் தடுக்க இந்த உடன்பாடு உதவிபுரிந்துள்ளது,” என்று அந்தப் பேச்சாளர் சொன்னார்.
அத்துடன், இப்போதைய மிகவும் நிச்சயமில்லாச் சூழல் ஏற்படுத்தியுள்ள சவால்களில் இருந்து மீண்டு வருவதே எஸ்ஐஏ குழுமத்தின் இலக்கு என்றும் அவர் தெரிவித்தார்.
அக்குழுமத்தைச் சேர்ந்த 2,600 விமானிகளில் கிட்டத்தட்ட 50 பேர் ஆட்குறைப்பு செய்யப்பட்டுள்ளனர் என்றும் அவர்களில் பெரும்பாலானோர் வெளிநாட்டவர்கள் என்றும் அறியப்படுகிறது.
இந்த நிதியாண்டிற்குள் 50% கொள்ளளவுடன் இயங்க முடியும் என எதிர்பார்ப்பதாக எஸ்ஐஏ குழுமம் தெரிவித்துள்ளது.
இப்போதைக்கு, எட்டு விழுக்காடு பயணிகள் கொள்ளளவுடன் அக்குழுமம் விமானங்களை இயக்கி வருகிறது.