சிங்கப்பூர் நிர்வாகப் பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வில் 95 விழுக்காட்டினர் கருத்து
குழந்தைப் பராமரிப்பு நிலையங்கள், உணவகங்கள், கடைத்தொகுதிகள் போன்ற இடங்களில் பொதுச் சுகாதாரத்தைப் பேண கடுமையான சட்டங்களை நடைமுறைப்படுத்த சிங்கப்பூர்வாசிகளில் கிட்டத்தட்ட 95 விழுக்காட்டினர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
சிங்கப்பூர் நிர்வாகப் பல்கலைக்கழகம் மூன்றாம் முறையாக மேற்கொண்ட பொதுத் தூய்மை மனநிறைவு கருத்தாய்வு மூலம் இது தெரியவந்துள்ளது. 21 வயதும் அதற்கும் மேற்பட்ட 1,716 சிங்கப்பூரர்களும் நிரந்தரவாசிகளும் பங்கேற்ற அந்தக் கருத்தாய்வு முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டன.
கடந்த டிசம்பர் மாதத்தில் இருந்து இவ்வாண்டு ஏப்ரல் மாதம் நோய்ப் பரவல் முறியடிப்புத் திட்டம் நடைமுறைக்கு வருமுன் இந்தக் கருத்தாய்வு மேற்கொள்ளப்பட்டது. சிங்கப்பூரில் பொதுத் தூய்மை, சுகாதாரம் பற்றி ஆய்வில் பங்கேற்றவர்களிடம் கருத்து கேட்கப்பட்டது.
இதற்குமுன், கடந்த 2016 அக்டோபர் முதல் 2017 மார்ச் வரையிலும் 2018 ஆகஸ்ட் முதல் டிசம்பர் வரையிலும் இருமுறை இத்தகைய கருத்தாய்வுகள் இடம்பெற்றன.
பலரும் பகிர்ந்துகொள்ளக்கூடிய பொது இடங்களில் கடுமையான சுகாதாரத் தரநிலைகளுக்கான சட்டங்கள் தேவை என்று 97 விழுக்காட்டினர் ஒத்துக்கொண்டனர். கட்டடங்களில் பொதுச் சுகாதாரத்திற்கு கட்டடத்தை நிர்வகிப்பவர்களே பொறுப்பேற்க வேண்டும் என அவர்கள் விருப்பம் தெரிவித்தனர்.
பொதுத் தூய்மையைப் பொறுத்தவரை, முந்தைய ஆண்டுகளைக் காட்டிலும் மனநிறைவு அதிகமாக இருப்பதைக் கருத்தாய்வு முடிவுகள் காட்டின.
அண்மையில் தாங்கள் சென்ற இடங்களில் பேணப்படும் பொதுத் தூய்மை குறித்து மனநிறைவு கொள்வதாக கிட்டத்தட்ட 93 விழுக்காட்டினர் தெரிவித்தனர். 2018ஆம் ஆண்டில் இந்த விகிதம் எட்டு விழுக்காடாக இருந்தது.
கொவிட்-19 நோய்ப் பரவலை அடுத்து தூய்மைப் பணிகளை முடுக்கிவிட்டது மனநிறைவு அதிகரிப்புக்குக் காரணமாக இருக்கலாம் எனக் கூறப்படுகிறது.
“கொரோனா ஏற்படுத்திய எதிர்மறை விளைவுகளை நாம் அனைவரும் காண்கிறோம். அதே வேளையில், அவசரமாக நாம் செய்யாத சில விஷயங்களைச் செய்வதற்கான வாய்ப்புகளை அந்நோய்ப் பரவல் ஏற்படுத்தித் தந்துள்ளது. இந்த நேரத்தில், பொதுச் சுகாதாரத்தில் கவனம் செலுத்த வேண்டியது பொருத்தமான ஒன்று. இப்போது நமக்குக் கிடைத்துள்ள வாய்ப்புகளைச் சாதகமாக்கிக் கொண்டோம் எனில், நீடித்து நிலைக்கத்தக்க வகையில் நாம் நடந்துகொள்ளும் விதத்தையும் மாற்றிக்கொள்ள அதிக வாய்ப்புள்ளதாகக் கருதுகிறேன்,” என்றார் சிங்கப்பூர் நிர்வாகப் பல்கலைக்கழகத்தில் சமூகவியல் (பயிற்சி) பேராசிரியர் பௌலின் டே ஸ்ட்ராகன்.
ஒட்டுமொத்த மனநிறைவு அதிகரித்து இருந்தாலும், உணவங்காடி நிலையங்களிலும் காப்பிக்கடைகளிலும் துப்புரவுப் பணிகளின் முழுமைத்தன்மை போதுமான அளவிற்கு இல்லை என்று 23 விழுக்காட்டினர் கூறியுள்ளனர்.
உண்மையில், தூய்மைப் பணிகளின் செயல்திறத்தாலேயே சிங்கப்பூர் சுத்தமாகக் காட்சியளிக்கிறது என 87 விழுக்காட்டினர் ஒத்துக்கொண்டனர்.
தூய்மை விவகாரங்களில் வெற்றிகரமாகத் திகழும் அக்கம்பக்கக் குழுக்களில் தொண்டூழியம் செய்வீர்களா என்ற கேள்விக்கு, பாதிப் பேர் மட்டுமே விருப்பம் தெரிவித்தனர்.
துப்புரவுப் பணிகளைப் பொறுத்தமட்டில், பல்வேறு இடங்களில் முழுமையான அளவில் அவை மேற்கொள்ளப்படுவதாகப் பெரும்பாலானோர் தெரிவித்தனர். ஆயினும், எம்ஆர்டி, எல்ஆர்டி நிலையங்களில் துப்புரவுப் பணிகளின் முழுமைத்தன்மை அளவுக்கு அதிகமாக உள்ளது என்று 12 விழுக்காட்டினர் கருத்துரைத்தனர்.