கொவிட்-19 நெருக்கடி ஏற்படுத்திய விளைவுகளால் பாதிக்கப்பட்டுள்ள காப்புறுதிதாரர்கள் தங்களது காப்புறுதிச் சந்தாவைச் செலுத்த மேலும் கால அவகாசம் கோரி விண்ணப்பிக்கலாம்.
வரும் அக்டோபர் 1ஆம் தேதியில் இருந்து 2021 மார்ச் 21ஆம் தேதிக்குள் காப்புறுதிச் சந்தா செலுத்த வேண்டியவர்கள், கால அவகாசம் கேட்டு விண்ணப்பிக்கலாம் என சிங்கப்பூர் ஆயுள் காப்புறுதிச் சங்கம் அறிவித்துள்ளது.
ஏற்கெனவே ஒருமுறை அத்தகைய அனுமதி பெறாதவர்கள், சந்தா செலுத்த ஆறு மாதம் வரை கால அவகாசம் அளிக்கக் கோரி தங்களது காப்புறுதி நிறுவனங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.
முதலாவது ஆறு மாத நீட்டிப்புக் காலம் இம்மாதம் 30ஆம் தேதியுடன் முடிவடையவுள்ள நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
அப்படிக் கால அவகாசம் பெற்ற பின்னரும் சந்தா செலுத்த முடியாதவர்கள் வேறு தெரிவுகள் ஏதேனும் உள்ளனவா என்பதை அறிய தங்களது காப்புறுதி நிறுவனங்களை நாடலாம் எனச் சங்கம் தெரிவித்துள்ளது.
மேலும் மூன்று மாதத்திற்கு அவகாசம் பெறுவது, மூன்று மாதத் தவணை முறையில் சந்தா செலுத்துவது போன்ற தெரிவுகள் இருக்கலாம் எனச் சொல்லப்படுகிறது.
இதனிடையே, காப்புறுதிதாரர்கள் நீக்குப்போக்கான சந்தா தவணைத் திட்டத்திற்காக அடுத்த ஆண்டு டிசம்பர் 31ஆம் தேதி வரை தங்களது காப்புறுதி நிறுவனங்களுக்கு விண்ணப்பிக்கலாம் என்றும் சந்தா செலுத்தப்பட்ட காலத்திற்கு அவர்களுக்கான காப்புறுதிப் பாதுகாப்பு நீடிக்கும் என்றும் சிங்கப்பூர் பொதுக் காப்புறுதிச் சங்கம் தெரிவித்து இருக்கிறது.
“கொரோனா நெருக்கடி காரணமாக நிதிப் பிரச்சினைகளை எதிர்கொண்டு வரும் காப்புறுதிதாரர்களுக்கு தொடர்ந்து ஆதரவளிக்கும் விதமாகக் காப்புறுதித் துறை எடுத்து வரும் நடவடிக்கைகளை சிங்கப்பூர் நாணய ஆணையம் வரவேற்கிறது. பாதிக்கப்பட்ட காப்புறுதிதாரர்கள் தங்களது காப்புறுதிகளைத் தொடர அல்லது மாற்றுக் காப்புறுதிப் பாதுகாப்பைப் பரிசீலிக்க அவை உதவும்,” என்றார் நாணய ஆணையத்தின் துணை நிர்வாக இயக்குநர் ஓங் சோங் டீ.