தங்களுக்குக் கிருமித்தொற்று இருப்பதை உறுதிசெய்வதற்கு முன்னர் கொவிட்-19 நோயாளிகள் சென்ற இடங்களின் பட்டியலை சுகாதார அமைச்சு தினமும் வெளியிட்டு வருகிறது. இப்பட்டியலில் 118, டன்லப் ஸ்திரீட்டில் அமைந்துள்ள ஹனிபா பிரைவட் லிமிடெட் சேர்க்கப்பட்டுள்ளது. சமூகத்தொற்று சம்பவமாக அடையாளம் காணப்பட்ட கொவிட்-19 நோயாளி, இம்மாதம் 7ஆம் தேதியன்று முற்பகல் 11.05 மணிக்கும் 11.50 மணிக்கும் இடைப்பட்ட நேரத்தில் கடையில் இருந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.
புக்கிட் தீமா சாலையிலுள்ள தேக்கா நிலையத்திற்கு செப்டம்பர் 9ஆம் தேதியன்று பகல் 12.25 மணிக்கும் 1 மணிக்கும் இடைப்பட்ட நேரத்தில் கொவிட்-19 நோயாளி சென்றிருந்தார் என்பது முன்னரே உறுதியான தகவல். இப்போது தேக்காவின் மற்றொரு இடமும் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது. கொவிட்-19 நோயாளிகள் தொற்றைப் பரப்பக்கூடிய நிலையில் இருந்தபோது குறைந்தது 30 நிமிடங்களுக்கு இருந்த இடங்களை அமைச்சு இந்த பட்டியலில் சேர்த்து வருகிறது. மேலும் கிருமி தொற்றியவர்கள் எத்தனை முறை இந்த இடங்களுக்குச் சென்றனர் என்ற தகவலையும் திரட்டி வருகிறது.
இதன்வழி பட்டியலில் உள்ள இடங்களுக்குக் குறிப்பிட்ட அந்த நாளிலும் நேரத்திலும் சென்றவர்கள் தொடர்ந்து இரண்டு வாரங்களுக்குத் தங்களின் உடல்நிலையைக் கண்காணிக்க வேண்டும்.
புதிய கிருமித்தொற்று சம்பவங்கள்
இதற்கிடையே நேற்று மேலும் 18 பேருக்குக் கிருமித்தொற்று இருப்பது உறுதியானது. ஒருவர் சமூகத்தில் இருப்பவர் என்றும் அவர் வேலை அனுமதி அட்டை வைத்திருப்பவர் என்றும் அமைச்சு கூறியது.
நால்வர் வெளிநாட்டிலிருந்து வந்தவர்கள் என்றும் சுகாதார அமைச்சு தெரிவித்தது.
தற்போதைய நிலவரப்படி சிங்கப்பூரின் மொத்த கிருமித்தொற்று சம்பவங்களின் எண்ணிக்கை 57,576ஐ எட்டியுள்ளது.
சனிக்கிழமை கிருமித்தொற்று சம்பவங்கள் குறித்த விவரம்
சனிக்கிழமையன்று உறுதிசெய்யப்பட்ட 15 கொவிட்-19 நோயாளிகளில் ஒருவர் சமூகத்தில் இருப்பவர் என்றும் அவர் 22 வயது சிங்கப்பூரர் என்றும் தெரிய வந்துள்ளது. இவருக்கு எவ்வாறு கிருமி தொற்றியது என்பதற்கான தகவல் இன்னும் அறியப்படவில்லை.
மேலும், சனிக்கிழமை பதிவான கிருமித்தொற்று சம்பவங்களில் வெளிநாட்டிலிருந்து வந்த 5 பேருக்கு, சிங்கப்பூர் வந்த பிறகு வீட்டிலேயே இருப்பதற்கான உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
இந்த ஐவரும் ஈரான் மற்றும் இந்தியாவிலிருந்து வந்தவர்கள். இம்மாதம் 6ஆம் தேதிக்கும் 15ஆம் தேதிக்கும் இடைப்பட்ட நாட்களில் இவர்கள் சிங்கப்பூருக்கு வந்தார்கள். எஞ்சிய ஒன்பது கொவிட்-19 நோயாளிகளும் தங்கும் விடுதிகளில் வசிக்கும் வெளிநாட்டு ஊழியர்கள்.