ஈஸ்ட் கோஸ்ட் பூங்காவில் செர்டிஸ் சிஸ்கோ துணை போலிஸ் அதிகாரி ஒருவர் தலையில் துப்பாக்கிச்சூட்டுக் காயத்துடன் இறந்து கிடந்தார்.
பூங்காவின் ‘C2’ கார் நிறுத்துமிடத்தில் சனிக்கிழமை காலை 6.15 மணியளவில் போலிசார் அந்த 42 வயது அதிகாரியின் உடலைக் கண்டனர்.
அதிகாரிக்குத் தரப்பட்ட துப்பாக்கி அவர் அருகில் கிடைத்ததாகவும் போலிசார் கூறினர்.
அன்று காலை 7.48 மணிக்கு அவர் இறந்துவிட்டதை மருத்துவ அதிகாரிகள் உறுதிசெய்தனர்.
அதிகாரி தமது வேலை முடிந்து துப்பாக்கியை வந்து தரவில்லை என்று அதற்கு முன்னதாக வெள்ளிக்கிழமை பின்னிரவு 1.30 மணிக்கு செர்டிஸ் சிஸ்கோ போலிசாரிடம் தெரிவித்திருந்தது.
இதனால் அதிகாரியைத் தேடும் பணியில் போலிசார் இறங்கினர். இதையடுத்து அதிகாரியின் இறப்பு தொடர்பில் விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இருப்பினும் இச்சம்பவத்தில் சூது இருப்பதாக சந்தேகிக்கவில்லை என்றும் போலிசார் கூறியுள்ளனர்.
இறந்து கிடந்த அதிகாரி எத்தனை ஆண்டுகளாக நிறுவனத்துடன் பணியாற்றினார் என்று கேட்கப்பட்ட கேள்விக்கு செர்டிஸ் சிஸ்கோ தகவல் கூற மறுத்துவிட்டது.
தங்களின் துணை போலிஸ் அதிகாரி ஒருவர் உயிரிழந்தது தங்களுக்குப் பெரும் வருத்தத்தை அளித்துள்ளதாகவும் அதிகாரியின் குடும்பத்தாருக்கு ஆதரவும் உதவியும் நல்கி வருவதாகவும் நிறுவனம் கூறியது.