மூன்று ஆண்டுகளுக்கு முன்பு, காப்பிக் கடை ஒன்றில் தனது மருமகனைக் கத்தியால் குத்திக் கொன்ற முதியவருக்கு எட்டரை ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. தனது மகளை 39 வயது ஸ்பென்சர் துபானி என்ற அந்த இளைய ஆடவர் நடத்திய விதம் குறித்த வருத்தத்தில் டான் நாம் செங், 72, இவ்வாறு செய்திருந்ததாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டிருந்தது. 2017ஆம் ஆண்டு ஜூலை 10 ஆம் தேதியன்று தெலுக் ஆயர் காப்பிக் கடையில் இந்தச் சம்பவம் நேர்ந்தது.
குத்தப்பட்ட திரு துபானி சம்பவ இடத்திலிருந்து ஓடிய பின்னர் புன் டாட் ஸ்திரீட்டிலுள்ள காப்பிக் கடை ஒன்றுக்கு முன்னாள் விழுந்ததை அருகில் இருந்த கண்காணிப்புக் கேமரா காணொளி எடுத்தது. போலிசார் சம்பவ இடத்தை அடைந்ததற்கு முன்னாள் டான், தன் மகளைத் தொலைபேசியில் அழைத்து தான் செய்ததைப் பற்றி அவரிடம் விளக்கினார். “நான் அவனைக் கொன்றுவிட்டேன். நீ அழாதே. எனக்கு வயதாகிவிட்டது,” என்று கூறியுள்ளார்.
தொடக்கத்தில் டான் மீது சாட்டப்பட்ட கொலைக் குற்றச்சாட்டு பின்னர் குறைக்கப்பட்டது. சம்பவத்தின்போது டான் கடுமையான மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டிருந்ததாகப் பின்னர் உறுதி செய்யப்பட்டது.
2017ஆம் ஆண்டின் தொடக்கத்தில் திரு டுப்பானி டானின் மகளை ஏமாற்றியதை அந்த முதியவர் தெரிந்துகொண்டார். திரு துபானிக்கும் அவரது கள்ளக் காதலிக்கும் இரண்டு பிள்ளைகள் இருப்பதையும் டான் கண்டுபிடித்தார். வர்த்தகரான டான், தனது சொத்துக்காக திரு டுப்பானி ஆசைப்பட்டதாகவும் சொத்தை வசப்படுத்திய பின்னர் திரு துபானி தனது மகளை மணவிலக்கு செய்யப் போவதாக டான் நம்பியதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.