‘ஏஐஏ சிங்கப்பூர்’ காப்புறுதி நிறுவனம் புதிய பட்டதாரி களுக்கும் பணியிடைக்கால வேலை தேடுவோருக்கும் காப்புறுதி தொழில்துறையில் சேர்வதற்கு 500 பயிற்சி வாய்ப்புகளை வழங்குகிறது. அதன் மூலம் பயிற்சியை முடித்தவர்களுக்கு ‘ஏஐஏ சிங்கப்பூர்’ காப்புறுதி நிறுவனத்தில் அல்லது அதன் நிதி ஆலோசனை வழங்கும் துணை நிறுவனத்தில் வேலை கிடைக்கலாம்.
பங்கேற்பாளர்களுக்கு நிதித் திட்டமிடுதல், ஆலோசனை வழங்குதல் போன்ற தொழில்நுட்பத் திறன்கள் போதிக்கப்படும். இந்தப் பயிற்சித் திட்டத்தை ‘ஏஐஏ சிங்கப்பூர்’, ஏஐஏ குழுமத்தின் சொத்து நிர்வாக நிறுவனமான ‘ஏஐஏ இன்வெஸ்ட்மண்ட் மேனேஜ்மண்ட்’ இரண்டும் இணைந்து வழங்குகின்றன.
பயிற்சிக்குத் தகுதி பெற்றவர்களுக்கு மாதம் $2,000 முதல் $5,000 வரை ஊக்கத்தொகை வழங்கப்படும். அத்துடன் குறிப்பிட்ட சில பயிற்சிகளை முடித்தவர்களுக்கு போனஸ் தொகையும் கிடைக்கும்.
“ஏஐஏ நிதி வாழ்க்கைத்தொழில் திட்டம் 2020 உள்ளூர் திறனாளர்களை உருவாக்க உதவும். இத்திட்டம் நிதித் துறையில் அவர்கள் பணியாற்றுவதற்குரிய தேவையான திறன்களை அவர்களுக்கு அளிக்கும். பயிற்சி முடிந்தவுடன் அவர்கள் ஏஐஏ நிறுவனத்தில் நிதி ஆலோசகராகப் பணியாற்றலாம் அல்லது இதர நிதிக் கழகங்களில் வேலைக்கு விண்ணப்பிக்கலாம்,” என்றார் ஏஐஏ சிங்கப்பூர் நிறுவனத்தின் தலைமை நிர்வாகி திருவாட்டி வோங் சீ கீட்.