சிங்கப்பூரில் வேலை பார்த்து வந்த இந்தோனீசியாவைச் சேர்ந்த தர்யாத்தி, 28, என்ற வீட்டு வேலை பணிப்பெண், 2016 ஜூன் 7ஆம் தேதி திருவாட்டி சியோவ் கிம் சூ என்ற தன்னுடைய 59 வயது முதலாளியை தெலுக் குரோவில் இருக்கும் முதலாளியின் வீட்டில் பலமுறை கத்தியால் குத்தி, வெட்டிவிட்டார்.
இதனால் அந்த மாதின் உடலில் 90க்கும் அதிக கத்திக்குத்து காயங்கள் ஏற்பட்டன. அவர் மாண்டுவிட்டார். பணிப்பெண் மீது கட்டாய மரண தண்டனை விதிக்கத்தக்க கொலைக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது. விசாரணை சென்ற ஆண்டு ஏப்ரல் 23 முதல் இந்த ஆண்டு மார்ச் 4 வரை நடந்தது.
இந்நிலையில், ஆயுள் தண்டனை அல்லது மரண தண்டனை விதிக்கக்கூடிய அளவுக்குக் கொலைக் குற்றச்சாட்டை அரசினர் தரப்பு குறைத்தது. அதேவேளையில், மரண தண்டனை விதிக்கும்படி நீதிமன்றத்தைத் தான் கேட்கப்போவதில்லை என்றும் அரசினர் தரப்பு கூறிவிட்டது.
திருவாட்டி சியோவின் கணவரான திரு ஓங் தியாம் சூன், என்பவரைக் கொலை செய்ய முயன்றதாகக் கூறும் இரண்டாவது குற்றச்சாட்டையும் அந்தப் பணிப்பெண் எதிர்நோக்குகிறார்.
ஆனால் இந்தக் குற்றச்சாட்டு கைவிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், பணிப்பெண் சார்பில் முன்னிலையாகும் முகம்மது முஸாமில் முகம்மது என்ற வழக்கறிஞர், தண்டனையைக் குறைக்கும் படி கேட்டு வாதாடுவதற்குத் தோதாக வழக்கு ஒத்திவைக்கப்பட்டு இருக்கிறது.
தன்னுடைய கட்சிக்காரர், ஆயுள்தண்டனையைத் தவிர்த்துக்கொள்ள முடியும் என்ற நம்பிக்கையில் மனோவியல் சாட்சியத்தை அடிப்படையாக வைத்து வாதிட விரும்புவதாக வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.
உயர் நீதிமன்றம் இதற்கான மனுவை நேற்று அனுமதித்தது. கொலைக்குற்றச்சாட்டின் பேரில் குற்றவாளி என்று வெளியான தீர்ப்பு ரத்து செய்யப்பட்டு உள்ளது. விசாரணை தொடர்ந்து நடக்கும்.