தீப்பிடிக்கும் அபாயம்: மீட்டுக்கொள்ளப்படும் குடிநீர் சாதனம்

தீப்பிடிக்கும் அபாயம்: மீட்டுக்கொள்ளப்படும் குடிநீர் சாதனம்

2 mins read
ebd97185-c06a-458f-92ef-ff8f0d18c168
படம்: GOLDLAND INTERNATIONAL -

ஐயோனா எனப்படும் 2011ஆம் ஆண்டிலிருந்து 2018ஆம் ஆண்டு வரை விற்பனையான குடிநீர் சாதனம் தீப்பிடிக்கக்கூடிய அபாயம் உள்ளதால் சந்தையிலிருந்து திரும்பப் பெறப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

GLWD700 ரக ஐயோனா சாதனத்தில் உள்ள மின்சார இணைப்பில் தேய்மான பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக அந்தக் குடிநீர் சாதனத்தின் உரிமையாளரான கோல்ட்லேண்ட் இன்டர்நேஷனல் நேற்று கூறியது.

"இந்தப் பிரச்சினையின் மூல காரணம் குறித்து உற்பத்தியாளருடன் விசாரித்து வரும் வேளையில், இந்த சாதனத்தின் உற்பத்தி, இதன் விற்பனை யாவும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது," என்று சமையலறைக்குத் தேவையான பொருட்களை உற்பத்தி செய்யும் உள்ளூர் நிறுவனமான கோல்ட்லேண்ட் இன்டர்நேஷனல் அறிக்கை ஒன்றின் வழி நேற்று தெரிவித்தது.

இதன் தொடர்பில் கேள்வி ஒன்றுக்குப் பதிலளித்த அந்த நிறுவனம், 2011ஆம் அண்டுக்கும் 2018ஆம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில் அந்தக் குடிநீர் சாதனம் பல்லாயிரக்கணக்கில் விற்பனையானதாக விளக்கியது.

முஸ்தஃபா சென்டர், கோர்ட்ஸ், பெஸ்ட் டெங்கி போன்ற மின்னியல் சாதனப் பொருட்களை விற்பனை செய்யும் மையங்களிலிருந்து இந்த சாதனம் தற்பொழுது மீட்டுக்கொள்ளப்படுவது இரண்டாவது முறை என்று கூறப்படுகிறது.

இதேபோல் சென்ற ஆண்டும் இந்த சாதனம் மீட்டுக்கொள்ளப்பட்டது நினைவுகூரத்தக்கது.

அப்பொழுது மீட்டுக் கொள்ளப்பட்ட இந்த சாதனத்தின் எண்ணிக்கை 100க்கும் குறைவு என்று கூறப்படுகிறது.

இதுபற்றி கூறிய கோல்ட்லேண்ட் இன்டர்நேஷனல் நிறுவனம், பயனீட்டாளர்கள் இந்தச் சாதனத்தைப் பயன்படுத்துவதை நிறுத்திக்கொள்ள வேண்டும் என்று தெரிவித்துள்ளது.

அவர்கள் ஐயோனா நிறுவனத்தை அதன் அவசர தொலைபேசி எண்ணான 6743 3926ல் வார நாட்களில் காலை 9.00 மணியிலிருந்து மாலை 5.30 வரை தொடர்பு கொள்ளலாம் அல்லது cs@iona.com.sg என்ற இணைய முகவரியில் தொடர்பு கொள்ளலாம் என்று கூறுகிறது.

கோல்ட்லேண்ட் இன்டர்நேஷனல் நிறுவனம் தனது இந்த நடவடிக்கை ஒரு முன்னெச்சரிக்கை நடவடிக்கை என்றும் தனது பொருட்கள் யாவும் அனைத்துலக மற்றும் சிங்கப்பூர் பாதுகாப்பு தர நிர்ணய அம்சங்களுக்கு உட்பட்டவை என்றும் விளக்கமளித்துள்ளது.