ஐக்கிய நாடுகள் நிறுவனத்தை (ஐ.நா.) மையமாகக் கொண்டு செயல்படும் விதிமுறைகளைச் சார்ந்த பலதரப்பு அணுகுமுறையே உலகளாவிய சவால்களைச் சமாளிக்க சிறந்த, நம்பிக்கைக்குரிய வழி என்று பிரதமர் லீ சியன் லூங் தெரிவித்துள்ளார்.
“விதிமுறைகளுக்கு உட்பட்டு நடந்துகொள்ளும் இந்த அணுகுமுறைதான் எல்லா நாடுகளுக்கும் சம உரிமையை அளித்துள்ளது,” என்று திரு லீ, ஐக்கிய நாடுகள் நிறுவனத்தின் 75வது ஆண்டு நிறைவு தொடர்பிலான உயர்மட்ட கூட்டத்தில் சிங்கப்பூர் நேரப்படி நேற்றுக் காலை பேசினார்.
ஐக்கிய நாடுகள் நிறுவனத்தின் உறுப்பு நாடுகள், பலதரப்பு அமைப்புகளின் மாற்றங்களை ஐ.நா. மூலமாக மற்ற நாடுகளுக்கும் தெரியப்படுத்த வேண்டும். அப்போதுதான் கொவிட்-19, பருவநிலை மாற்றம் போன்ற உலகளாவிய சவால்கள் தொடர்பில் அனைத்து நாடுகளும் ஒன்றிணைந்து செயல்பட ஏதுவாக இருக்கும் என்று பிரதமர் கேட்டுக்கொண்டார்.
சிறிய நாடுகளும்குரல்கொடுக்க ஒரு வாய்ப்பு
உலக அளவிலான விவகாரங்கள் என்று வரும்போது சிங்கப்பூர் போன்ற சிறிய நாடுகளும் குரல் எழுப்ப ஐ.நா. வாய்ப்பளித்துள்ளது என்று கூறிய திரு லீ, அதிக அமைதியான, நிலையான உலகளாவிய சுற்றுச்சூழல் மூலம் வல்லரசுகளும் பலன் அடைந்துள்ளன என்றார்.
ஐ.நா. ஒரு மைல்கல் ஆண்டை நிறைவு செய்யும் தருணத்தில், பொதுச் சபை உட்பட அதன் கூட்டங்கள் பெரும்பாலும் மெய்நிகர் மூலமாகத்தான் நடைபெறுகின்றன.
கொள்ளைநோய்ப் பரவலும் தனிமைப்படுத்தும் கட்டுப்பாடுகளும் பெரும்பாலான உலகத் தலைவர்கள் கூட்டத்தில் கலந்துகொள்ள நியூயார்க்குக்கு வருவதை மிகவும் சிரமமாக்கியுள்ளன.
கிட்டத்தட்ட 170 உலக நாடுகளின் தலைவர்கள் தங்கள் உரையைக் காணொளி வழியாகத்தான் வழங்கவிருக்கிறார்கள்.
ஐ.நா.வுக்கு நாடுகளின் ஒத்துழைப்பு அவசியம்
“ஐ.நா. 75வது ஆண்டு நிறைவு கூட்டத்தின் கருப்பொருள் ‘நமக்குத் தேவையான எதிர்காலம், நமக்குத் தேவையான ஐக்கிய நாடுகள் நிறுவனம்’ என்பதாகும்.
“கொவிட்-19 கிருமித்தொற்று, உலக நாடுகள் ஒன்று மற்றதைச் சார்ந்திருப்பதன் முக்கியத்துவத்தையும் அனைத்துலக ஒத்துழைப்பின் அவசியத்தையும் தெள்ளத்தெளிவாக எடுத்துரைத்திருக்கிறது.
“கொவிட்-19 கிருமித்தொற்றுக்கு முன் புவிஅரசியல் பதற்றம் அதிகரித்திருந்தது. ஆனால், கிருமித்தொற்று உலகநாடுகளைப் புரட்டிப்போட்டதற்குப் பிறகு மிக மோசமான காலகட்டத்தில் உள்ள நாடுகள் அதை உணர்ந்து, ஒத்துழைப்பின் அடிப்படையில் செயல்பட வேண்டும்.
“அதற்கு உலக நாடுகள் தங்களின் முழு ஒத்துழைப்பை ஐ.நா. அமைப்புக்கு வழங்க வேண்டும்,” என்றும் பிரதமர் லீ வலியுறுத்திக் கூறினார்.