கொரோனா கிருமி தாக்கப்பட்ட உறைந்த உணவுப் பொருட்களைக் கொண்ட நிறுவனங்களிலிருந்து இறக்குமதியைத் தடை செய்யத் தேவையில்லை என்று தொற்று நோய் நிபுணர்கள் கூறுகின்றனர்.
ஏனென்றால், பொதுவான நோய்த்தொற்று வழிமுறைகளுடன் ஒப்பிடும்போது, உணவு மூலம் நோய் பரவும் ஆபத்து மிகக் குறைவு. இருந்தபோதிலும், உணவு தயாரிப்பில் ஈடுபடுபவர்கள் கடுமையான தனிப்பட்ட சுகாதாரத்தைக் கடைப்பிடிக்க வேண்டும். மேற்பரப்புகளும் பாத்திரங்களும் முறையாகச் சுத்தம் செய்யப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என கூறப்பட்டுள்ளது.
“உணவு பதப்படுத்தும் தொழிற்சாலைகள் கொவிட்-19 கிருமித்தொற்று இல்லாத பாதுகாப்பான தரத்தை உறுதிப்படுத்த வேண்டும் என்று உலகம் வலியுறுத்த வேண்டும்,” என்று தேசிய பல்கலைக்கழக மருத்துவமனையின் தொற்று நோய்கள் பிரிவின் மூத்த ஆலோசகர் பேராசிரியர் டேல் ஃபிஷர் கூறினார்.
“வெளிநாட்டிலிருந்து உணவைப் பெறும்போது, கையாளுபவர்கள் வழக்கமான கை சுகாதாரத்தை கடைப்பிடிக்க வேண்டும். மேலும், மேற்பரப்புகள், பாத்திரங்கள் தொடர்ச்சியாக சுத்தம் செய்யப்படுவதை உறுதி செய்ய வேண்டும்.”
“இதில், முக்கியமாகப் பாதிக்கப்படக்கூடியவர்கள் இதுபோன்ற உணவுகளை கையாளும் ஊழியர்கள்தான், உண்போர் அல்ல,” என்று அவர் கூறினார். எனினும் ஊழியர்களுக்கும் இந்த முறையில் தொற்று ஏற்படுவது “மிகவும் சாத்தியமில்லாத நிகழ்வு” என்று பேராசிரியர் ஃபிஷர் கூறினார்.