ஆகாயப் படை தொழில்நுட்ப வல்லுநர்களாக தேசிய சேவையாற்றும் தொழில்நுட்பக் கல்விக் கழக (ஐடிஇ) பட்டதாரிகளுக்குப் பட்டயம் பெறுவதற்கான வாய்ப்புகள் விரைவில் செய்து தரப்படும்.
தொழில்நுட்ப கல்விக் கழகமும் சிங்கப்பூர் ஆகாயப்படையும் இணைந்து வழங்கும் இத்திட்டத்தை, அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் ஏறத்தாழ 20 பயிற்சி பெறும் தேசிய சேவையாளர்கள் மேற்கொள்வார்கள்.
ஓரே நேரத்தில் பணியையும் படிப்பையும் மேற்கொள்ள இத்திட்டம் வழிவகுக்கும்.
விமானப் பராமரிப்பு பொறியியல் துறையில் இந்த வேலை-படிப்பிற்கான பட்டயம் வழங்கப்படுகிறது. இது போன்ற வாய்ப்பு முழு நேர தேசிய சேவையாளர்களுக்கு கிடைப்பது இதுவே முதல் முறை.
இரண்டரை ஆண்டுகளுக்கு நீடிக்கும் இத்திட்டம் பயிற்சி பெறுபவர்களுக்கு விமான அமைப்புகளையும் செயல்முறைகளையும் பராமரிக்கும் திறன்களைப் கற்பிக்கும். விண்வெளித் துறையில் பணிபுரிய ஐடிஇ மாணவர்களுக்கு இது ஒரு மாற்று வழியாகவும் அமையும்.
முக்கிய நிறுவனங்களான ‘எஸ்டி என்ஜினியரிங் ஏரோஸ்பேஸ்’, ‘எஸ்ஐஏ என்ஜினியரிங்’, சிங்கப்பூர் விண்வெளி துறைகளின் சங்கம் ஆகிய அமைப்புகளின் ஆதரவுடன் இம்மாதம் 22ஆம் தேதி இத்திட்டம் தொடங்கியது.
இத்திட்டத்தைப் பூர்த்தி செய்ய ஜடிஇ பட்டதாரிகள் தங்கள் முழு நேர தேசிய சேவையைக் குறைந்தபட்சம் மூன்று ஆண்டுகளுக்காவது செய்யவேண்டும்.
தகுந்த துறைகளில் சான்றிதழ் பெறும் நைடெக், உயர் நைடெக் புது ஐடிஇ பட்டதாரிகளுக்கு இந்த திட்டம் கைகொடுக்கும். திட்டத்தை நிறைவு செய்பவர்கள் முழு நேரமாக சிங்கப்பூர் ஆயுதப்படையில் சேர்ந்து ஆகாயப் படை பொறியாளர்களாக பணியாற்றலாம். அல்லது விண்வெளித் துறையில் விமானப் பராமரிப்பு குறித்த வேலைகளில் சேரலாம்.