சிங்கப்பூரில் இனிமேல் ஆறு வயதுக்கும் அதற்கு மேற்பட்ட வயதுடைய சிறார்கள் கட்டாயமாக முகக்கவசம் அணிய வேண்டும் என்பது சட்டமாக்கப்படும்.
தற்போது 2 வயதுக்கும் அதற்கும் மேற்பட்ட சிறார்களுக்கும் முகக்கவசம் அணிவது கட்டாயமாக உள்ளது.
இந்த மாற்றங்கள் நேற்று நிகழ்ந்த பல அமைச்சுகள் பணிக்குழுவில் தெரிவிக்கப்பட்டது.
ஆறு வயதுக்கும் அதற்குக் குறைவான வயதுடைய சிறார்களுக்கு முறையாக முகக்கவசம் அணியும் ஒருங்கிணைப்புத் திறன் முழுமையாக இருக்காது என உலக சுகாதார அமைப்பும் ஐக்கிய நாட்டு அனைத்துலக சிறார் அவசரநிலை நிதி அமைப்பும் (UNICEF) அண்மையில் தெரிவித்தன.
அதைத் தொடர்ந்து அவ்விரு அமைப்புகளுக்கும் ஒத்துப்போகும் வகையில் இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளது என சுகாதார அமைச்சின் இயக்குநர் திரு கென்னத் மாக் நேற்றைய மெய்நிகர் செய்தியாளர் கூட்டத்தில் கூறினார்.
ஏற்கெனவே தற்போது இளம் பிள்ளைகள் முகக்கவசம் அணிவதில் நீக்குப்போக்கு கடைப்பிடிக்கப்படுகிறது என்றும் 12 வயதுக்குக் குறைவான சிறார்கள் முகக்கவசத்திற்குப் பதில் முகக்கேடயம் பயன்படுத்த அனுமதிக்கப்படுகிறது என்றும் அவர் சுட்டினார்.