திருட்டுக் குற்றத்துக்காக சிறைத் தண்டனை விதிக்கப்பட்டு, உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்து குற்றமற்றவர் எனத் தீர்ப்பளிக்கப்பட்ட இந்தோனீசியப் பணிப்பெண்ணான திருவாட்டி பார்த்தி லியானி அந்த வழக்கில் விசாரணை நடத்திய இரு அரசாங்கத் தரப்பு வழக்கறிஞர்கள் மீது ஒழுங்குமுறை விசாரணை மேற்கொள்ள வேண்டுமென நீதிமன்றத்தில் மனு செய்துள்ளார்.
இதுதொடர்பான வழக்குக்கு முந்திய கலந்துரையாடல் நேற்று நடைபெற்றதாக அவரது வழக்கறிஞர் திரு அனில் பல்சந்தானி தெரிவித்தார். அரசாங்கத் தரப்பு வழக்கறிஞர்கள் டான் வீ ஹாவ், டான் யான்யிங் ஆகிய இருவருக்கு எதிராக பார்த்தி லியானி கடந்த ஜூன் மாதம் புகார் செய்தார். இந்நிலையில், தங்கள் தரப்பு நியாயத்தை எடுத்துக்கூற சம்பந்தப்பட்ட அரசு தரப்பு வழக்கறிஞர்களும் நீதிமன்றத்திடம் அனுமதி கோரியுள்ளனர். பிரபல வர்த்தகரான திரு லியூ மன் லியோங்கின் வீட்டில் பல ஆண்டுகள் பணிபுரிந்தார் திருவாட்டி பார்த்தி லியானி. அவர் தங்களிடமிருந்து $34,000 பெறுமானமுள்ள பொருட்களைத் திருடியதாக திரு லியூவின் குடும்பத்தார் குற்றம் சுமத்திஇருந்தனர்.