கொரோனா கிருமித்தொற்று நெருக்கடிநிலையின்போது தாம் அணிந்திருந்த முகக்கவசத்தைக் கழற்றி பேரங்காடியில் கூட்டத்தைக் கட்டுப்படுத்திக்கொண்டிருந்த ஒருவர் மீது வேண்டுமென்றே இருமிய ஆடவருக்கு ஐந்து வார சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
புக்கிட் பாத்தோக் வெஸ்ட் அவென்யூ 6 புளோக் 451ல் உள்ள ஷெங் சியோங் பேரங்காடியில் வாசலில் பணிபுரிந்துகொண்டிருந்த 52 வயது திருவாட்டி இங் போ வெய் தமது முகத்தில் வழிந்தோடிய வியர்வையைத் துடைக்க தமது முகக்கவசத்தைக் கொஞ்சம் விலக்கியதை சிங்கப்பூரரான டான் ஷியாவ் வீ கண்டார். முகக்கவசத்தை விலக்கியதற்காக அவரை டான் ஏசினார். சம்பவம் நிகழ்ந்தபோது கிருமித்தொற்றால் டான் பாதிக்கப்பட்டிருக்கவில்லை என்று தெரிவிக்கப்பட்டது. அங்கு வைக்கப்பட்டிருந்த கிருமி நாசினி திரவத்தை திருவாட்டி இங் மீது அவர் பலமுறை பீய்ச்சியடித்தார்.
போலிசிடம் தெரிவிக்கப்போவதாக திருவாட்டி இங் கூறியதை அடுத்து அவர் மீது டான் இருமினார்.
தொல்லை விளைவித்ததையும் கொவிட்-19 தொடர்பான சட்டத்தை மீறியதையும் கடந்த ஜூலை மாதம் 28ஆம் தேதியன்று டான் ஒப்புக்கொண்டார்.