விபத்தில் மாண்ட மலேசியர் வழக்கில் இன்று தீர்ப்பு

விபத்தில் மாண்ட மலேசியர் வழக்கில் இன்று தீர்ப்பு

2 mins read
cb80e710-5437-4496-a230-2271aacf31a2
விபத்தின் காரணமாக தூக்கி எறியப்பட்டு சாலையில் விழுந்த திரு ஹெங் லே பெங்கின் மீது கனரக வாகனம் ஏறியது. படம்: ஸ்டோம்ப் -

கடந்த ஆண்டு சிங்கப்பூர் விரைவுச்சாலை ஒன்றில் ஏற்பட்ட விபத்தில் மலேசிய ஆடவரான திரு ஹெங் லே பெங் மரணம் அடைந்தார். கொவிட்-19 கட்டுப்பாடுகளால் நீதிமன்றத்தில் நேற்று நடந்த மரண விசாரணையில் இறந்தவரின் குடும்பதாரால் கலந்துகொள்ள இயலவில்லை. எனினும் இறந்தவரின் குடும்ப நண்பர் திரு டான் ஹொக் சூன் விசாரணையில் கலந்துகொண்டார்.

கடந்த ஆண்டு டிசம்பர் 16ஆம் தேதி நிகழ்ந்த சம்பவத்தை போக்கு வரத்து போலிஸ் அதிகாரி முகமது யாஸிட் முகமது யூசோஃப் நீதிமன்றத்தில் விவரித்தார்.

அன்று காலை 8.45 மணி அளவில் திரு ஹெங், தனது மோட்டார்சைக்கிளில் சிலேத்தார் விரைவுச்சாலையில், புக்கிட் தீமா விரைவுச்சாலை நோக்கி சென்றுகொண்டிருந்தார். தச்சு வேலை பார்த்த அவர் செம்பவாங்கில் வேலைக்குச் சென்றுகொண்டிருந்தார்.

அப்போது அவருக்கு முன்னால் சென்றுகொண்டிருந்த கார் திடீரென்று நின்றது. இடது புறமாக தனது மோட்டார்சைக்கிளைத் திருப்ப முயன்ற திரு ஹெங் காரின் பின்புறமாக மோதினார். அதனால் மோட்டார்சைக்கிளிலிருந்து திரு ஹெங் கிட்டத்தட்ட இரண்டு கார்களின் நீளம் உள்ள தூரத்திற்கு தூக்கி எறியப்பட்டார்.

அவர் முன்னால் வந்துகொண்டிருந்த 'டிரெய்லர்' கனரக வாகனத்துக்கு முன்னால் திரு ஹெங் விழ, கனரக வாகனம் திரு ஹெங்கின் மீது ஏறியது.

சம்பவ இடத்தின் அருகே இருந்த பல வாகனங்களின் கேமராக்களிலிருந்து சேகரிக்கப்பட்ட காணொளிகள் நீதிமன்றத்தில் காண்பிக்கப்பட்டது.

45 வயது திரு ஹெங் சம்பவ இடத்திலேயே மரணம் அடைந்துவிட்டதை சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை முதலுதவி அதிகாரிகள் உறுதி செய்தனர்.

மோட்டார் வாகனத்துடன் மோதியதால் ஏற்பட்ட காயங்கள் திரு ஹெங்கின் மீது இருந்ததாக பிரேதப் பரிசோதனை அறிக்கை தெரிவித்தது.

திரு ஹெங் மோதிய காரும், அதற்கு முன்னால் சென்று கொண்டிருந்த இன்னொரு காரின் மீது மோதியுள்ளது.

அப்பர் தாம்சன் சாலை நுழைவாயிலுக்கு அருகே இந்த விபத்து நேர்ந்தது.

திரு ஹெங் தனது நெருங்கிய நண்பர் என்றும் அவர் மிகவும் நல்லதொரு மனிதர், மகன் என்றும் திரு ஹெங்கின் குடும்பத்தின் சார்பில் எழுதப்பட்ட ஒரு செய்தியை திரு டான் நீதிமன்றத்தில் வாசித்தார். திரு ஹெங் சட்டத்தை மதித்து நடக்கும் ஒரு வெளிநாட்டு ஊழியர் என்றும் கடந்த 20 ஆண்டு

களாக சிங்கப்பூரில் பணி புரிந்து வந்துள்ளார் என்றும் அவர் தெரிவித்தார். திரு ஹெங்கின் மரணம் குறித்து இன்று தீர்ப்பளிக்கப்படும் என்று மரண விசாரணை அதிகாரி கமலா பொன்னம்பலம் தெரிவித்தார்.