எதிர்வரும் சீன சமய வழிபாட்டு காலகட்டத்தில் கூசு (Kusu) தீவிற்கு ஒரு நாளில் 500 பேர் மட்டுமே அனுமதிக்கப்படுவர். அங்கு செல்வோருக்கு பாதுகாப்பான சூழலை வழங்க இந்த செயல்முறை நடப்புக்கு வருவதாக சிங்கப்பூர் நில ஆணையம் நேற்று வெளியிட்ட அறிக்கை தெரிவித்துள்ளது.
அக்டோபர் 17ஆம் தேதி முதல் நவம்பர் 14ஆம் தேதி வரை தீவுக்கு செல்லும் படகில் அதிகபட்சம் 50 பேர் வரை மட்டுமே பயணம் செய்யலாம் என்று அத்தீவை நிர்வகிக்கும் ஆணையம் கூறியது.
தீவுக்குச் செல்லும் முதல் படகு மரினா சவுத் பியரில் இருந்து காலை 7 மணிக்குச் செல்லும். கடைசி படகு தீவிலிருந்து இரவு 7 மணிக்குக் கிளம்பும். அத்துடன், ஒரு மணிநேரத்திற்கு ஒரு படகு மட்டுமே தீவிற்குச் சேவை வழங்கும்.
இந்தத் தீவில் ஒரு சீனக் கோயிலும் மூன்று மலாய் வழிபாட்டு இடங்களும் உள்ளன. இங்குள்ள துவா பெக் கொங் கோயிலில் நடைபெறும் சமய வழிபாட்டில் ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பர்.
இந்தத் தீவுக்குச் செல்ல விரும்புவோர் இம்மாதம் 28ஆம் தேதி முதல் சிங்கப்பூர் நில ஆணையத்தின் இணையத்தளம் வழி பதிவுசெய்துகொள்ள வேண்டும். ஒரு பதிவில் ஐந்து பெயர்கள் வரை இடம்பெறலாம். தகுதியுடைய விண் ணப்பதாரர்களுக்கு மின்னஞ்சல் வழி உறுதிக் கடிதம் அனுப்பப்படும்.
படகுக்கான பயணச் சீட்டை வாங்கும்போது இந்த உறுதி மின்னஞ்சலைக் காட்ட வேண்டும்.
தீவுக்குச் செல்லும் நாளில் படகுப் பயணச் சீட்டை வாங்கலாம்.
உடல் வெப்பநிலை பரிசோதனை, ‘ஃசேவ்என்டரி’ பதிவு போன்றவற்றுடன் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் கூடுதல் நடைமுறைகளும் இடம்பெறும்.
சீனக் கோயிலுக்குள் 30 பேர் மட்டுமே ஒரு நேரத்தில் அனுமதிக்கப்படுவர். மலாய் கிராமாட்டில் 15 பேருக்கே அனுமதி உண்டு. தீவில் இரவில் தங்குவதற்கும் வளர்ப்புப் பிராணிகளை அழைத்துச் செல்வதற்கும் அனுமதியில்லை.
அடுத்த மாதம் தொடங்கும் சிறப்பு வழிபாட்டுக் காலத்தில் செயின்ட் ஜான்ஸ் தீவுக்கு வழக்கமாகச் செல்லும் படகுகள் மரினா சவுத் பியருக்குத் திரும்பும்போது கூசு தீவில் நிற்காது. தனியார் படகுகள், சொகுசு படகுகளுக்கும் கூசு தீவின் படகுத்துறையில் இறங்க அனுமதியில்லை.